‛ஏய் உட்காருமா’.. மனு கொடுத்த மூதாட்டியை அதட்டி அமர வைத்த திமுக எம்எல்ஏ.. பரபரப்பு -வெடித்த சர்ச்சை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ உதயசூரியன் மனு கொடுக்க வந்த மூதாட்டியிடம் கோபமாக நடந்து கொண்டார். மேலும் அவர் அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில்‛ஏய்.. உட்காருமா' என அதட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் தான் அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் சில நிகழ்ச்சிகளில் நடந்து கொள்ளும் விதம் மற்றும் பேசும் விஷயங்கள் சர்ச்சையாகி விடுகின்றன. சமீபத்தில் அமைச்சர் பொன்முடி மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை ஓசி என கூறியது பெரிய அளவில் சர்ச்சையானது.
அதேபோல் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் பெண்ணின் தலையில் அடித்தது, மனு அளிக்க வந்த நரிக்குறவர் இன பிரதிநிதியை அமரவைக்காமல் பேசியது உள்ளிட்ட சர்ச்சைகளை அவர் எதிர்கொண்டார். அதேபோல் அமைச்சர் நாசர் கல் எடுத்து வீசியதும் பெரிய சர்ச்சையை கிளப்பியது. மேலும் இந்துக்கள் தொடர்பாக எம்பி ஆ ராசா கூறியது விவாதத்தை ஏற்படுத்தியது.
இதனால் முதல்வர் ஸ்டாலின் வருத்தம் அடைந்தார். மேலும் அமைச்சர்கள் முறையாக நடந்து கொள்ள வேண்டும். பொதுவெளியில் பேசும்போது கவனமாக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என கூறினார். இருப்பினும் கூட அவ்வப்போது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் சர்ச்சையில் சிக்குவது தொடர்ந்து வருகிறது.

இதற்கு மத்தியில் தான் புதிதாக அமைச்சர் பொன்முடி சர்ச்சையில் சிக்கினார். அதாவது திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் நிகழ்ச்சியும், புதியவர்களை பூத் கமிட்டி நிர்வாகிகளாக நியமிக்க கூறினார். ஆனால் இதை நிர்வாகிகள் கடைப்பிடிக்காததால் கோபமடைந்த பொன்முடி படிவங்களைத் தூக்கி ஆவேசமாக வீசினார்.

இது விவாதத்தை கிளப்பியதற்குள் தான் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. தற்போது விவாதத்தை கிளப்பி இருப்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன். இவர் மூதாட்டி ஒருவரை கூட்டத்தில் அதட்டி பேசியது தான் விவாதத்தை கிளப்பி உள்ளது. அதாவது சின்னசேலம் அருகே உள்ள விபி அகரம் கிராமத்தில் 42.60 லட்ச ரூபாய் மதிப்பில் கிராம ஊராட்சி செயலக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இறத்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இதில் எம்எல்ஏ உதயசூரியன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு பொதுமக்கள் மத்தியில் உதயசூரியன் எம்எல்ஏ பேசிக்கொண்டிருந்தார். அப்போது மூதாட்டி ஒருவர் தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் கொடுக்க எழுந்து சென்றார். அப்போது திடீரென கோபமடைந்த எம்எல்ஏ உதயசூரியன் ‛ஏய் உட்காரும்மா' எனக்கூறி அதட்டினார். இதையடுத்து அந்த மூதாட்டி அங்கிருந்து தனது இருக்கைக்கு திரும்பினார். இதையடுத்து சிரித்த எம்எல்ஏ பேசி முடித்தபிறகு மனுவை தாருங்கள் என கூறினார். இந்நிலையில் தான் எம்எல்ஏ உதயசூரியன் மூதாட்டியை அதட்டி பேசும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications