கேகேஎஸ்எஸ்ஆர், சேகர்பாபு உட்பட திமுகவில் உள்ள மாஜி அதிமுகவினருக்கும் குறிவைக்கிறது ஓபிஎஸ் அணி?
திமுகவில் தற்போது எம்.எல்.ஏக்களாக இருக்கும் மாஜி அதிமுகவினரையும் வளைத்துப் போடும் முயற்சியில் ஓபிஎஸ் அணி இறங்கியுள்ளதாம்.
சென்னை: திமுகவில் தற்போது எம்.எல்.ஏக்களாக உள்ள மாஜி அதிமுகவினருக்கு ஓபிஎஸ் அணி குறிவைத்திருக்கிறது என அந்த கோஷ்டியைச் சேர்ந்த முன்னாள் எம்பி கே.சி. பழனிச்சாமி அதிரடி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்களை வளைத்து திமுக ஆட்சி அமைக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் திமுக, ஜனநாயக வழியில்தான் ஆட்சிக் கட்டிலில் அமருவோம்; கொல்லைப்புறமாக அமரமாட்டோம் என திட்டவட்டமாக கூறிவிட்டது.
திமுக நினைத்திருந்தால் நிச்சயம் குதிரைபேரம் மூலமாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்க முடியும்தான். இதை திமுக செயல் தலைவர் ஸ்டாலினே பல இடங்களில் சுட்டிக்காட்டியும் பேசிவந்தார்.
மாஜி அதிமுகவினருக்கும் வலை
இந்த நிலையில் ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் திமுகவில் உள்ள மாஜி அதிமுகவினரும் கூட ஓபிஎஸ் அணிக்கு வரக் கூடும் என்கிற தொணியில் அந்த கோஷ்டியைச் சேர்ந்த முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி டிவி விவாதத்தில் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நியூஸ் டிவி 18 தமிழ்நாடு சேனலின் காலத்தின் குரல் விவாத நிகழ்ச்சியில் கேசி பழனிச்சாமி கூறியதாவது:
மீண்டும் ஒரு கூவத்தூர்
ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்குப் பின்னர் தமிழகம் மீண்டும் ஒரு கூவத்தூரை சந்திக்கும். அப்போது ஓபிஎஸ் அணிக்கு 98 எம்.எல்.ஏக்கள் வருவார்கள். திமுகவில் உள்ள எங்கள் முன்னாள் சகாக்களும் கூட வருவார்கள். இவ்வாறு கே.சி. பழனிச்சாமி கூற அரங்கம் அதிர்ந்து போனது.
யார் யார்?
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு போனவர்களில் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், சேகர் பாபு உள்ளிட்டோர் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். இவர்களில் சேகர்பாபுவின் உறவினர்தான் ஓபிஎஸ் அதிமுகவின் ஆர்கே நகர் வேட்பாளர் மதுசூதனன்.
சலசலப்பு சேகர்பாபு
ஆர்கே நகர் தேர்தல் தொடர்பான மாவட்ட செயலாளர் கூட்டத்திலேயே, அதிமுக வாக்குகள் நமக்கு வராது; திமுக வாக்குகள் விலைபோகாமல் பார்க்க வேண்டும் என பேசி சலசலப்பை உருவாக்கினார். தமது உறவினர் மதுசூதனன் நிற்பதாலேயே அவருக்கு ஆதரவாக வேலை பார்க்க முடிவு செய்துவிட்டாரா சேகர்பாபு என்றெல்லாம் ஆதங்கப்பட்டனர் திமுக நிர்வாகிகள்.
கேகேஎஸ்எஸ்ஆர்
அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன். தற்போதைய ஓபிஎஸ் அணியினர் பலருமே ஜூனியர்கள்தான். ஒருவேளை ஓபிஎஸ் அணி ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்படும் நிலையில் திமுகவில் உள்ள மாஜி அதிமுகவினருக்கு வலைவிரிக்கப்படும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.