விவசாயிகள் பந்த்துக்கு ஆதரவு... திமுக எம்.எல்.ஏக்கள் நாளை சட்டசபை புறக்கணிப்பு!
சென்னை: கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் நாளை சட்டசபையை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
காவிரியில் புதிய அணைகள் கட்டும் கர்நாடகாவைக் கண்டித்து தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இதனால், பேருந்துகள் இயக்கப்படுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. பேருந்து மற்றும் ரயில் மறியல் மேற்கொள்ள விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

முழுஅடைப்பு போராட்டத்தை ஒட்டி நாளை சட்டசபைக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று திமுகவின் துரைமுருகன், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை முதல்வர் ஏற்கவில்லை.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், விவசாயிகள் போராட்டம் நடத்தும் நிலையில் நாளை பேரவைக் கூட்டம் நடப்பதாகப் புகார் தெரிவித்தார். அனைத்து கட்சியும் விவசாயிகள் போரட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் கூட்டம் நடைபெற்றது. காவிரி விவகாரத்தில் துரோகம் இழைத்தது அதிமுக-தான் எனவும் துரைமுருகன் புகார் தெரிவித்தார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின், சனிக்கிழமை நடைபெறும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டசபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications