சட்டசபைக்குள் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்? சட்டை கிழிக்கப்பட்டது.. குண்டுக்கட்டாக வெளியேற்றம்
சபை ஒத்தி வைக்கப்பட்ட இடைவெளியில், ஒவ்வொரு திமுக எம்.எல்.ஏக்களாக குண்டுகட்டாக காவலர்கள் வெளியேற்றனர். இதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது தாக்கப்பட்டார்.
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திமுகவினர் இடையூறு செய்ததாக குற்றம்சாட்டி அக்கட்சி எம்.எல்.ஏக்களை கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால் வெளியேற மறுத்த திமுகவினரால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சபையை ஒத்தி வைத்துவிட்டு படிப்படியாக அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிய சபாநாயகர் முயன்றபோது அதை திமுகவினர் தடுத்தனர். ரகசிய வாக்கெடுப்பு தேவை என கோரி பெரும் அமளியில் ஈடுபட்டனர். மேஜை, நாற்காலிகள் உடைந்தன. சபாநாயகர் தள்ளுமுள்ளுவிற்கு உள்ளானார்.

இதையடுத்து 1 மணிக்கு சபை மீண்டும் கூடியது. அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை விடுத்தார். இதை சபாநாயகர் ஏற்கவில்லை. எனவே மீண்டும் திமுகவினர் கோஷமிட்டனர். அமைச்சர்கள் மேஜை மீது ஏறி நின்று சபாநாயகரை நோக்கி கோஷமிட்டனர். சபாநாயகர் முன்பாக இருந்த மைக்கை மீண்டும் உடைத்தனர்.
எனவே, சபையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்ற கூறி சபாநாயகர் உத்தரவிட்டார். அவைக் காவலர்கள் புகுந்து திமுகவினரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முற்பட்டனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக வெளியேற்ற முயற்சி நடைபெற்றது. அவைக்காவலர்கள் வெளியேற்ற முயன்றபோது, திமுகவினர் எதிர்த்து தள்ளுமுள்ளு செய்தனர். கோஷமிட்டனர். இதனால் காவலர்களால் வெளியேற்ற முடியவில்லை. உள்ளேயே திமுகவினர் தர்ணா நடத்தியதால் அவையை மதியம் 3 மணிக்கு ஒத்தி வைத்தார் சபாநாயகர் தர்ணா.
திமுக உறுப்பினர்கள் வெளியே போககூடாது என்ற முடிவோடு உள்ளேயே அமர்ந்தனர். சபை ஒத்தி வைக்கப்பட்ட இடைவெளியில், ஒவ்வொரு திமுக எம்.எல்.ஏக்களாக குண்டுகட்டாக காவலர்கள் வெளியேற்றனர். இதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் பிற திமுக உறுப்பினர்களும் தர்ணா நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால், காவலர்கள் ஸ்டாலின், துரைமுருகன் போன்ற திமுக சீனியர் உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
ஸ்டாலின் வெளியேற்றப்பட்டபோது, அவரது சட்டை கிழிபட்டு இருந்தது. அவர் காவலர்களால் சபைக்குள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications