மதுவிலக்கு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு- தி.மு.க, காங்., இடதுசாரிகள், பு.த, ம.ம.க. வெளிநடப்பு!
சென்னை: மதுவிலக்கு குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டசபையில் இருந்து இன்று தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், புதிய தமிழகம் கட்சி மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு கோரும் தனித் தீர்மானத்துக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தி.மு.கவைத் தொடர்ந்து காங்கிரஸ், புதிய தமிழகம், இடதுசாரிகள் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் எம்.எல்.ஏ.க்களும் அடுத்தடுத்து வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததற்கு பிறகு ஜீரோ அவரில் ஏற்கெனவே சபாநயகரிடத்தில் தந்துள்ள ஒத்திவைப்பு தீர்மானங்கள், தனித் தீர்மானங்களை எடுக்க வேண்டும்; அதன் மீது பேச வேண்டும் என்று கோரிக்கை வைக்க இருந்தோம். அந்த நேரத்தில் திடீரென சபாநாயகர், 110-வது விதியின் கீழ் முதல்வர் சில அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக கூறினார். முதல்வர் இந்த அறிவிப்புகளை வெளியிட்ட பின்னர் நாங்கள் பேசலாம் என காத்திருந்தோம்.
ஏற்கனவே இதுபோல் வெளியிட்ட அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட நாங்கள் மட்டுமல்ல அனைத்து கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்றும் பல அறிவிப்புகளை முதல்வர் படித்துள்ளார். ஏற்கெனவே சபாநாயகரிடத்தில் நாங்கள் பூரண மதுவிலக்கு, சசிபெருமாள் மரணத்துக்கு நீதி விசாரணை; குடிநீர் தட்டுப்பாடு போன்ற 22 பிரச்சனைகளுக்காக ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களைக் கொடுத்திருக்கிறோம்.
இதனிடையே நேற்று சபாநாயகரிடத்தில் மதுவிலக்கு பற்றி தனித் தீர்மானம் கொண்டுவருவதற்கும் நோட்டீஸ் கொடுத்திருந்தோம். இன்று காலை சபாநாயகர் உத்தரவுப்படி சட்டசபை செயலாளர் எனக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் சட்டசபை விதிகளின்படி மானியக் கோரிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் வேறு தீர்மானத்தை எடுத்துக் கொள்ள முடியாது எனக் கூறியிருக்கிறார். ஆனால் சட்டசபை விதிகளில் அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மதுவிலக்கு தொடர்பான தனித் தீர்மானத்துக்கு அனுமதி மறுத்த காரணத்தால் இன்று தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.