'மம்தாவுக்கு பயம்'..'என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை'.. பிரதமர் மீதே பாய்ந்த ஆ.ராசா
புதுக்கோட்டை: அதானி குற்றவாளி என்றால் பிரதமர் மோடியும் குற்றவாளி தான். இதை கூறியதற்காக என் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுத்து என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை.. நான் சிறைக்கு செல்ல தயாராக உள்ளேன் என்று திமுக எம்பி ஆ.ராசா கூறினார்.
மேலும் ஆ ராசா கூறும் போது, அதானி விவகாரத்தில், வருமான வரித்துறைக்கு பயந்து, மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் வாய் திறக்கவில்லை என்றும் கூறினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் திருக்கோகர்ணத்தில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் ஞாயிறு இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் துணை பொதுசெயலாளர் ஆ.ராசா எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், " தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா பெரிய அளவில் இருந்தது. அதன்பின்னர் மழை வெள்ளம் என பல்வேறு இடர்பாடுகள் இருந்தது. இதையெல்லாம் முன்னின்று எதிர்கொண்டு முதல்வர் ஸ்டாலின் தீர்த்து வைத்தார். ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது ரூ.6 லட்சம் கோடி கடனில் தமிழகம் இருந்தது.
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கவில்லை, கருணாநிதிக்கு ஏன் ரூ.80 கோடியில் நினைவு சின்னம் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்களுக்கு கையெழுத்திட்ட கருணாநிதிக்கு பேனா சின்னம் வைக்க கூடாதா?. வறுமை கோர்ட்டிற்கு கீழ் உள்ளவர்களின் சதவீதம் தமிழகத்தில் தான் குறைவாக உள்ளது.

அதானி விவகாரத்தில் ரூ.10 லட்சம் கோடி முறைகேடு நடந்தது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினர். அவர் பதில் அளிக்காமல் மவுனம் காப்பது ஏன்?. அமலாக்க துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகியவற்றுக்கு பயந்து மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா, பஞ்சாப் முதலமைச்சர்கள் யாரும் பேசவில்லை. இவ்வளவு பெரிய ஊழலை தட்டிக்கேட்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான். அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.

அதானி குற்றவாளி என்றால் பிரதமர் மோயும் குற்றவாளி தான். இதை கூறியதற்காக என் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுத்து என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை.. நான் சிறைக்கு செல்ல தயாராக உள்ளேன்" என திமுக எம்பி. ஆ.ராசா கூறினார்.












Click it and Unblock the Notifications