திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மனைவி தேவிகா ராணி மரணம்: ஸ்டாலின் அஞ்சலி
திருச்சி: திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மனைவி தேவிகா ராணி(50) இன்று அதிகாலை 1.10 மணிக்கு மரணம் அடைந்தார்.
திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவாவின் மனைவி தேவிகா ராணி(50). மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவரை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பிறகு அவர் சென்னை கிளம்பினார்.
பின்னர் தேவிகாவின் உடல் நிலை மோசமடைந்தது. இந்த தகவல் ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை கிளம்பிய அவர் மீண்டும் திருச்சிக்கே திரும்பினார்.
புற்றுநோயுடன் போராடிய தேவிகா இன்று அதிகாலை 1.10 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சிவா, தேவிகா தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.