சென்னையில் திமுக அலுவலகம் மீது அதிமுகவினர் கல்வீசி தாக்குதல்
சென்னை: சென்னையில் திமுக அலுவலகம் மீது அதிமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆரம்பம் முதலே அதிமுக வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர். இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியன் வெற்றி பெற்றார்.
இதையடுத்து அந்த தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரத்தில் உள்ள திமுக அலுவலகத்துக்கு வந்த அதிமுக கவுன்சிலர் கந்தன் தலைமையிலான கும்பல் திமுக அலுவலகத்தின் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது.
இதனைஅடுத்து அப்பகுதியில் இருந்த திமுகவினருக்கு அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கற்களால் தாக்கி கொண்டனர். அப்பகுதியில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதில் திமுகவை சேர்ந்த இருவர் காயமடைந்தனர். மேலும், அப்பகுதியில் வன்முறை ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.