திமுகவில் இனி 70 மாவட்ட செயலாளர்கள்?
சென்னை: லோக்சபா தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுக மாவட்டங்களை 3 அல்லது 4 ஆக பிரிக்க திமுக முடிவு செய்துள்ளது. தற்போது உள்ள 34 மாவட்டங்களை மொத்தம் 70 வரை பிரிக்கலாம் என்று திமுகவின் சீரமைப்புக்கான குழு ஆலோசித்து வருகிறது.
லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட திமுக வெல்லவில்லை. இதைத் தொடர்ந்து திமுக நிர்வாக அமைப்பில் மாற்றம் கொண்டுவர 6 பேர் குழு நியமிக்கப்பட்டது.
இக்குழுவில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, கலசப்பாக்கம் திருவேங்கடம், ஒரத்தநாடு ராஜமாணிக்கம், திருத்துறைப்பூண்டி கல்யாண சுந்தரம், ஈரோடு சச்சிதானந்தம், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றனர்.

6 பேர் குழு
கடந்த வாரம் 6 பேர் குழு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரை முருகன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியது.

ஆலோசனை
அந்த ஆலோசனையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள், கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் ஆகியவை குறித்து விரிவான அறிக்கை அளிக்க கோரப்பட்டது. கட்சியை 2016 பொதுத் தேர்தலுக்கு முன்பு பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளும் கேட்கப்பட்டன.

150 பக்க அறிக்கை
அதை தொடர்ந்து தி.மு.க. மாவட்டங்களை பிரிப்பது, மாவட்ட செயலாளர்களை மாற்றுவது, புதிய செயலாளர்கள், நிர்வாகிகளை நியமனம் செய்வது மற்றும் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து 150 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டது.

70 மாவட்டங்கள்
இந்த அறிக்கை நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் கொடுக்கப்பட்டது. அதில், தற்போது தி.மு.க.வில் இருக்கும் 34 மாவட்டங்களை 70 ஆக பிரிக்க வேண்டும். சென்னையை 6 அல்லது 7 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்.

பரிந்துரைகள் என்ன?
மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்களுக்கான தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கக் கூடாது என்று யோசனை கூறப்பட்டுள்ளது.

மா.செ.க்களுக்கு ஆப்பு
தேர்தலின் போது சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள் யார்? மாவட்ட செயலாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத வேட்பாளர்கள் யார்? கோஷ்டியாக பிரிந்து செயல்பட்டது யார் யார்? கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் யார்? என்பது பற்றிய விவரங்களும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இந்த 6 பேர் குழு அறிக்கையின் அடிப்படையில் கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications