வருகிறார் புதிய தலைவர்.. பெரியார் முதல் ஸ்டாலின் வரை.. திமுக கடந்த நெடும் பயணம்!
திமுக கட்சியின் இரண்டாவது தலைவராக ஸ்டாலின் நாளை தேர்வு செய்யப்பட உள்ளார்.
சென்னை: திமுக கட்சியின் இரண்டாவது தலைவராக ஸ்டாலின் நாளை தேர்வு செய்யப்பட உள்ளார். திமுகவின் மிகநீண்ட வரலாற்றில் இப்போதுதான் மிகப்பெரிய தலைமை மாற்றம் நடக்கிறது.
திமுகவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்காக நாளை பொதுக்குழு நடக்க உள்ளது. இதில் ஸ்டாலின் கண்டிப்பாக தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
திமுகவின் வரலாறு திராவிட கழகத்தில் இருந்து தொடங்கியது.. பெரியாரில் இருந்து தொடங்கியது.. பெரியார் விதைத்த சின்ன விதை 70 வருடம் தாண்டி ஆலமரமாக நிற்கிறது. இதில் தலைவர் பதவி மிக முக்கியமான வரலாற்றை கொண்டுள்ளது.

திமுகவின் வரலாறு
பெரியாரால் தொடங்கப்பட்ட திராவிட கழகத்தில் இருந்து, சில காரணங்களால் அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பிரிந்து திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார்கள். செப்டம்பர் 17, 1949இல் திமுகவை உருவாக்கும் எண்ணம் தொடங்கியது. இதனால் செப்டம்பர் 18, 1949இல் திமுகவின் முதல் அதிகாரப்பூர்வ பேரணி சென்னை ராயபுரத்தில் நடந்தது .

பொதுச்செயலராக அண்ணா
ஆனால் கட்சி தொடங்கிய பின் திமுகவின் தலைவராக அண்ணா பொறுப்பேற்கவில்லை. பெரியாருக்கு மரியாதை அளிக்கும் வகையில் தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டு இருந்தது. திமுக கட்சியின் முதல் பொதுச்செயலராக அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுகவின் கொடியாக கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி தேர்வு செய்யப்பட்டது.

போட்டி இல்லை
திமுக தொடங்கிய பின் நடந்த முதல் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை. இந்திய அரசியல் சட்டத்தை திமுக கண்டிப்பதாக தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனாலும் திமுகவிற்கு அந்த தேர்தலில் பெரிய அளவில் ஆதரவு இருந்தது.

முதல் தேர்தல் போட்டி
1956ல் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. 2ஆவது மாநில மாநாட்டில் மிக முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. இதில்தான் தேர்தலில் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அப்போது அனைத்து தொகுதியிலும் போட்டியிடவில்லை. மொத்தம் 112 இடங்களில் போட்டியிட்டது. அதில் 15 இடங்களில் மட்டுமே அக்கட்சி வென்றது.

ஆட்சி அமைத்தது
அதன்பின், திமுக வெகுவேகமாக வளர்ந்தது. தெருத்தெருவாக சென்று பிரச்சாரம் செய்து அண்ணாவும், கருணாநிதியும், அன்பழகனும், வைகோவும், இரா. நெடுஞ்செழியனும் கட்சியை வளர்த்தார்கள். இதன் பயனால் 1967-ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திமுக வென்றது. மொத்தம் 138 இடங்களை வென்றது. இதனால் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. 1967 மார்ச் 6-ல் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரானார்.

அண்ணாவின் மறைவு
இந்த நிலையில் அண்ணா, முதல்வராக இருக்கும் போதே 1969ல் பிப்ரவரி 3ம் தேதி மரணம் அடைந்தார். இந்த மரணம் தமிழகத்தையே உலுக்கியது. கோடிக்கணக்கில் மக்கள் இந்த நிகழ்விற்கு வந்தனர். இந்த நிலையில் அதே வருடம் 1969ல் திமுக தலைவராக கருணாநிதி நியமிக்கப்பட்டார்.

தமிழக முதல்வராக தேர்வானார்
1969இல் மு.கருணாநிதி திமுக தலைவராக தேர்வான பின் மு. கருணாநிதி, தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதிலிருந்து ஐந்து முறை தமிழக முதல்வராக கருணாநிதி தேர்வு செய்யப்ட்டுள்ளார். இவர் ஒருமுறை கூட தேர்தலில் தோல்வி அடைந்தது இல்லை.

50 வருடம் தலைவர்
27/7/1969 அன்று திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த ஜூலை 7ம் தேதியோடு, அவர் 50 ஆண்டுகளை தலைவராக கழித்து சாதனை படைத்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார்.

அடுத்த தலைவர்
இந்த நிலையில்தான் திமுகவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலின் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். இதற்காக நாளை பொதுக்குழு நடக்க உள்ளது. இதில் ஸ்டாலின் கண்டிப்பாக தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். அவருக்கு எதிராக யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் ஸ்டாலின் கண்டிப்பாக தலைவராக தேர்வு செய்யப்படுவார்.












Click it and Unblock the Notifications