மே 3ல் மதுரை பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பிரச்சாரம்... அழகிரி வீட்டில் ஸ்பெஷல் விருந்து
மதுரை: திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளைய தினம் மதுரையில் திமுக தலைவர் கருணாநிதி பிரச்சாரம் செய்கிறார். அன்று இரவு மதுரையில் தங்கும் கருணநிதிக்கு அவரது மகன் மு.க. அழகிரி வீட்டில் இருந்து ஸ்பெஷல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
93 வயதிலும் படு சுறுசுறுப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் கருணாநிதி. சென்னையில் தொடங்கி வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் முதற்கட்ட சுற்றுப் பயணத்தை கருணாநிதி முடித்து விட்டார்.
தென் மாவட்டங்களில் அடுத்த கட்ட பிரச்சாரத்தை தொடங்கும் கருணாநிதி, நெல்லை பொதுக்கூட்டத்தில் மே 2ல் பங்கேற்று மறுநாள் ராஜபாளையம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி உட்பட பல்வேறு இடங்களில் அவர் வேன் பிரசாரம் மேற்கொண்டு, மே 3ல் மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதாக இருந்தது.
திடீரென நெல்லை பொதுக்கூட்டம் மற்றும் வேன் பிரசாரம் நேற்று ரத்து செய்யப்பட்டு, மே 3ல் மதுரை பொதுக்கூட்டத்தில் மட்டும் அவர் பேச போவதாக பிரசார பயணம் மாற்றி அமைக்கப்பட்டது. 2ம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், மே 16ம் தேதி நடைபெறவுள்ள தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்திற்காக என்னுடைய திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல் இன்று தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. என்று கூறியுள்ளார்.
கருணாநிதி அறிக்கை
என்னுடைய முதல் கட்ட 6 நாள் தொடர்ச்சியான சுற்றுப் பயண நிகழ்வுகளின் அனுபவம் தான். 6 நாட்களும், பிரசார வேனில் தான் வாசம். ஆனால் அந்த வேன் ஒவ்வொரு ஊரிலும் மனித சமுத்திரத்திற்குள் புகுந்து குறுகுறு நடந்து சிறு கரம் நீட்டித் தத்தித் தவழ்ந்து வரும் குழந்தையைப் போல வெளிவந்ததை நீ தொலைக் காட்சிகளில் பார்த்துக் களித்துப் பெருமிதம் அடைந்திருப்பாய்.
உடன்பிறப்புகள் ஆலோசனை
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது சுற்றுப் பயணத்தை மேலும் விரிவுபடுத்திக் கொள்வதாகவும், நான் அதிகம் சிரமப்படக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். ஆர்வமும் அக்கறையும் கொண்ட உடன்பிறப்புகளின் ஆலோசனையின் பேரில் தற்போது எனது சுற்றுப் பயணம் திருத்தப்பட்டு இந்த நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.
வெற்றிவிழாவிற்கு வருகிறேன்
முதலில் வெளி வந்த சில ஊர்களின் பெயர்கள் தற்போது விடுபட்டுப் போயிருக்கலாம். வரவிருக்கின்ற பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற பின்னர், தற்போது விடுபட்ட ஊர்களுக்கு உங்களுடைய வெற்றி மகிழ்வில் பங்கு கொள்ள நான் நிச்சயமாக நேரில் வருகை தருவேன் என்ற உறுதியினைத் தருகிறேன்.
வெற்றிக்கு உழைத்திடுங்கள்
உங்களில் நானும், என்னுள் நீங்களும் ஐக்கியமாகி இருக்கிறோம் என்ற உணர்வுடன், நான் வராததை வந்ததாகவே கருதி, திமுக கூட்டணி வேட்பாளர்கள் இந்த தேர்தலில் மிகப் பெரிய வெற்றியினை ஈட்டிட அனைவரும் உழைத்திட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
மதுரைக்கு விமான பயணம்
மதுரையில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாளை காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வருகிறார். அங்கிருந்து அழகர்கோவில் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி, இரவு அண்ணாநகரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். நாளை இரவு மதுரையில் தங்கும் அவர், 4ம் தேதி காலை விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
அழகிரியுடன் சந்திப்பு
மதுரையில் கருணாநிதி தங்கும்போது அவரை அழகிரி சந்தித்துப் பேசுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. முன்னர் தயாரிக்கப்பட்ட தேர்தல் பிரசார திட்டத்தில், கருணாநிதி மதுரையில் தங்காமல், பொதுக்கூட்டம் முடிந்த பின் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்புவதாக இருந்தது. ஆனால், தற்போது மதுரையில் தங்கும் வகையில் அவரது பிரசார பயணம் மாற்றப்பட்டுள்ளதால் அவரை மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி சந்தித்து பேசுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அழகிரி வீட்டு சாப்பாடு
மதுரை வரும் கருணாநிதியை சந்திக்குமாறு இரண்டு நாட்களுக்கு முன் அழகிரியிடம் அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். அதற்கு, அவர், 'மதுரையில் தங்கினால் சந்திக்கிறேன்,' என தெரிவித்தாராம். மதுரையில் தங்கும் கருணாநிதிக்கு அழகிரி வீட்டில் இருந்து ஸ்பெஷல் சாப்பாடு தயாரித்து கொண்டு செல்லவும் ஏற்பாடு நடக்கிறதாம்.
2ம் கட்ட பிரச்சார பயணம்
திமுக தலைவர் கருணாநிதியின் திருத்தப்பட்டதேர்தல் சுற்றுப்பயணத்தின் படி 3-5-2016 மாலை மதுரை பொதுக் கூட்டம். 5-5-2016 மாலை சென்னை பொதுக் கூட்டம்8-5-2016 மாலை தங்கசாலை மணிக்கூண்டு- பொதுக் கூட்டம் 11-5-2016 திருவாரூர் தொகுதி (வாக்காளர்கள் சந்திப்பு வேன் மூலம்) 14-5-2016 பிற்பகல் 3 மணி சென்னை சேப்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.