செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம்: ஹைகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கோரி திமுக தீர்மானம்
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் ஹைகோர்ட் நீதிபதி தலைமையில், நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 3 முக்கிய தீர்மானங்கள், கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது நிறைவேற்றப்பட்டன.
முன் அறிவிப்பு இன்றி அளவுக்கு அதிகமான நீரை செம்பரம்பாக்கத்தில் இருந்து திறந்துவிட்டதுதான் சென்னை சந்தித்த வெள்ள பிரச்சினைக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ள திமுக, இதுபற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என கருணாநிதி தலைமையில், கவர்னர் ரோசய்யாவை சந்தித்து மனு கொடுத்தனர்.
இருப்பினும், இதுவரை நீதி விசாரணைக்கு உத்தரவிடவில்லை. எனவே இக்கோரிக்கையை வலியுறுத்தி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு எதிரே கருணாநிதி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். .

கருணாநிதி, திமுக பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன், பேராசிரியர் அன்பழகன், ஜெ.அன்பழகன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணி மற்றும் பல மாவட்ட கழக செயலாளர்கள் வந்திருந்தனர்.
ஆட்சிக்கு எதிராகவும், நீதி விசாரணை கேட்டும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இக்கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம்-1: செம்பரம்பாக்கம் ஏரி நீர் கொள்ளளவை தாண்டியபோதும், தமிழக அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வர் அக்கறை இன்றி இருந்தார். நிலைமை கைமீறி போனபிறகு, முன் அறிவிப்பு இன்றி, திடீரென 33 ஆயிரம் கன அடி நீர் திடீரென திறக்கப்பட்டதுதான் சென்னையில் நிகழ்ந்த சேதத்திற்கு காரணம் என நீர் மேலாண்மை வல்லுநர்களும், ஊடகங்களும் தெரிவித்துள்ளன.
மழையை முன்கூட்டியே எதிர்பார்த்து, ஏரி நீரை திறந்துவிட்டு ஏரியை பாதுகாப்பதுதான் நல்ல அரசின் அழகு. ஆனால் கையாலாகாத அதிமுக அரசு, ஏரி நீரை திறந்துவிட்டு சேதத்திற்கு காரணமாகியுள்ளது. இதுகுறித்து உரிய பதில் அரசு தரப்பில் இன்னும் வரவில்லை. எனவே, தற்போது பதவியிலுள்ள, ஹைகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து, செம்பரம்பாக்கம் நீர் திறப்பு பற்றி விசாரணை நடத்த வலியுறுத்துகிறோம்.
தீர்மானம்-2: வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசு இதுவரை ரூ.1939 கோடியை வழங்கியுள்ளது. கர்நாடகா, ஆந்திரா பல மாநிலங்கள் நிதி உதவி வழங்கியுள்ளன. ஆனால் நிவாரண நிதி எல்லா மக்களுக்கும் போய் சேரவில்லை. ஆளும் கட்சியினருக்கு மட்டுமே நிதி வழங்கப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் சென்று சேர, அனைத்து கட்சி பிரதிநிதிகள் , என்ஜிஓ அடங்கிய குழு அமைத்து நிவாரணம் வழங்க வேண்டும்.
தீர்மானம்-3: வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களை அவர்கள் பகுதியில் இருந்து காலி செய்து வேறு பகுதியில் குடியேற்றம் செய்வதால், படிப்பு, வேலை போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பாதிப்புக்குள்ளான மக்களை சென்னைக்குள்ளேயே மறுகுடியேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தொண்டர்களின் கரகோசத்தையே ஒப்புதலாக கருதி அவை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications