தொகுதி பங்கீடு... டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி தவறு- கட்சிக்கு சம்பந்தமில்லை- திமுக தலைமை மறுப்பு
சென்னை: சட்டசபைத் தேர்தலில் 170 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்தும் கூட்டணி குறித்தும் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் அளித்த பேட்டிக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகத்தின் செயலாளர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவன் "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேட்டில் கொடுத்துள்ளதாக வந்துள்ள பேட்டியில் இடம் பெற்றுள்ள செய்திகளுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

அவர் பெயரில், அந்தப் பத்திரிகையில் வந்துள்ள செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சம்மந்தமே இல்லை. இவ்வாறு பொறுப்பற்ற முறையில் தலைமைக் கழகத்திலே உள்ளவர்கள் பேட்டி அளிப்பதும், செய்திகளைக் கொடுப்பதும் ஏற்கத்தக்கதல்ல.
கழகத்தைப் பற்றி அந்த ஏட்டில் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாக வந்துள்ள செய்திகள் அனைத்தும் தவறானவை என்பதால், கழகத் தோழர்கள் யாரும் அதனை நம்ப வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக டி.கே.எஸ் இளங்கோவன் தனது பேட்டியில், 2016 சட்டசபைத் தேர்தலில் திமுக 170 தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், ஜாதிக்கட்சிகளாக பாமக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொள்ள கருணாநிதி விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார்.
கூட்டணி பற்றியும், காங்கிரஸ் கட்சிக்கு உள்ள செல்வாக்கு பற்றியும் அவர் தனது பேட்டியில் கூறியிருந்தார். இந்த பேட்டி பெரும்பாலான இணையதளங்களிலும் வெளியானது. பரபரப்பாகவும் பேசப்பட்டது. பேட்டி வெளியான சிலமணி நேரங்களிலேயே திமுக தலைமைக் கழகம் மறுப்பு வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications