உள்ளாட்சி தேர்தல்: திமுகவில் களையெடுப்பு தொடங்குகிறது! மா.செ.க்களை தூக்கி அடிக்க திட்டம்!!
உள்ளாட்சி தேர்தலை முன்வைத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் அரங்கேற உள்ளது. மாவட்ட செயலாளர்கள் பலரையும் மாற்ற திட்டமிட்டுள்ளது திமுக.
சென்னை: உள்ளாட்சித் தேர்தலை முன்வைத்து திமுகவில் 'குறட்டைவிடும்' மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
அதிமுக பல கோஷ்டிகளாக சிதறிப் போயுள்ளன.. சிதைந்தும் வருகிறது. இச்சூழ்நிலையில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் வென்றாக வேண்டிய நெருக்கடியில் திமுக உள்ளது.
அதுவும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் செயல் தலைவராக்கப்பட்ட ஸ்டாலினின் தம்மை நிரூபித்தாக வேண்டிய நெருக்கடியும் உள்ளது.
ஆர்கே நகர் அதிரடி
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சாதாரண தொண்டர் ஒருவரை வேட்பாளராக அறிவித்து திரும்பிப் பார்க்க வைத்தார் ஸ்டாலின். இருந்தபோதும் இரட்டை இல்லாத அந்த தேர்தல் களத்தில் திமுக நிச்சயம் வென்றுவிடும் என கூற முடியாத திரிசங்கு நிலைதான் இருந்தது.
அதிமுக பிளவு
தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில் திமுக எளிதாக வென்றாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
மா.செ.க்கள் மாற்றம்?
இதனால் தற்போது மாவட்ட செயலாளர்கள் பலரையும் மாற்றிவிடுவது என முடிவில் இருக்கிறது திமுக தலைமை. நாங்களும் கட்சியில் இருக்கிறோம் என கெத்து மட்டும் காட்டிக் கொண்டு கோட்டைவிடும் குறட்டை விடும் மாவட்ட செயலர்களுக்கு பதில் இளம் வயது மாவட்ட செயலாளர்களை நியமிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்.
உள்ளடி வேலைக்கு வார்னிங்
அதேபோல் மாவட்ட செயலாளர் பதவிகளில் கணிசமாக பெண்களும் இடம்பெறக் கூடும் என்கின்றன் அண்ணா அறிவாலய வட்டாரங்கள். தூக்கி அடிக்கப்படும் மாவட்ட செயலாளர்கள் உள்ளடி வேலை பார்க்கவும் கூடாது என திமுக தலைமை கடுமையாக எச்சரிக்கவும் திட்டமிட்டுள்ளதாம்.