"கருணாநிதி கோர்ட்டுக்கு வந்தது அரசியல் என்றால்.. ஜெ. வாய்தா வாங்கியது என்னவாம்?"
சென்னை: திமுகவின் தேர்தல் பிரசாரம் எப்போதோ தொடங்கி விட்டது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஸ்டாலின் மதுரை போயுள்ளார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அரசியல், தேர்தல் தொடர்பாக கேள்விகள் கேட்டனர்.

நாளைய சட்டசபை கூட்டத்தொடரில் திமுக முன் வைக்கும் பிரச்சனைகள் என்ன என்ற கேள்விக்கு நாளைக்கு சட்டசபை வாருங்கள். அங்கு பதில் சொல்கிறேன். நாளைய தொடரில் கவர்னர் உரை நிகழ்த்துகிறார். அதன் பிறகு அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாள் சபை கூடும் என்பதை முடிவு செய்வார்கள் என்றார்.
மதுவிலக்கை அமுல்படுத்த தொடர்ச்சியாக திமுக போராடி வருகிறதே? இதுபற்றி சட்டசபையில் குரல் எழுப்பப்படுமா என்ற கேள்விக்கு இந்த சட்டசபை கூட்டத் தொடரில் தமிழகத்தில் மதுவிலக்கை அமுல் படுத்த நிச்சயமாக திமுக வலியுறுத்தும் என்றார் ஸ்டாலின்.
திமுக தலைவர் கருணாநிதி கோர்ட்டில் ஆஜரானது அரசியல் காரணத்திற்காகவா என்ற கேள்விக்கு அப்படியானால் முதல்வர் ஜெயலலிதா அவரது வழக்குகளுக்காக வாய்தா வாங்கி ஆஜரானதும் அரசியல் காரணமா? நான்கரை ஆண்டு கால அதிமுக. ஆட்சி பற்றி தலைவர் கலைஞர் எடுத்து சொன்னார். இதற்காக அதிமுக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்ததால் அவர் கோர்ட்டில் ஆஜராகி உள்ளார் என்று விளக்கினார் ஸ்டாலின்.
அதிமுக பிரசாரத்தைத் தொடங்கி விட்டது, திமுக எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு திமுக எப்போதோ தொடங்கி விட்டது என்று பதிலளித்தார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications