ஆலுமா டோலுமா... சட்டம் ஒழுங்கு அவுட்டும்மா... இது இன்றைய திமுக "டீசர்"!
சென்னை: தமிழக முதல்வர் மக்களை சந்திக்காதது தொடங்கி, மின்சாரத்தில் ஊழல், சென்னையில் வெள்ளம் வரைக்கும் ஆளும்காட்சியை தாக்கி விளம்பரம் செய்து வரும் திமுகவினர், இன்றைக்கு வேதாளம் படத்தில் இருந்து பாடல் வரியை உருவி.... 'ஆலுமா டோலுமா... சட்டம் ஒழுங்கு அவுட்டும்மா... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? என்று கேட்டுள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு இரு திராவிட கட்சிகளும் வார்த்தை போரிலும், விளம்பர போரிலும் ஈடுபட்டுள்ளன. திமுகவின் விளம்பரத்தில் அதிமுக தலைமையின் செயல்பாட்டையும், அரசாங்கத்தையும் விமர்சித்து முதன்மைபடுத்தி உள்ளது. இந்த ஆட்சி முடியட்டும் உதய சூரியன் விடியட்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து அதிமுகவின் இணையதள பிரிவு திமுகவினருக்கு திருப்பி ஒரு போஸ்டரை பதிலடியாக கொடுத்தது. அதில் கடந்த ஐந்து வருடத்தில் கருணாநிதியை நடிகைகளின் திருமண விழாவில் பார்த்திருப்பீர்கள், கலை நிகழ்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள், மானாட மயிலாட நிகழ்ச்சியில் பார்த்திருப்பீங்க. ஆனால் சட்ட சபையில் பார்த்திருக்கீங்களா? அட திருவாரூர் தொகுதியிலாவது பார்த்திருக்கீங்களா.
என்னடா இப்படி பண்றீங்களேடா.....! முடியட்டும் திமுக, விடியட்டும் தமிழகம் என்று கேட்டனர்.

தொடரும் போஸ்டர் யுத்தம்
அதற்கெல்லாம் அசராத திமுக மறுநாளும் அனைத்து பத்திரிகைகளிலும் மீண்டும் அதே போன்று ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. ஆனால் அது கடைசி பக்கத்தில் வெளியானது. மூன்றாம் நாள் வெளியான 'மண்ணெண்ணை, வேப்பெண்ணை, வௌக்கெண்ணை' விளம்பரமோ அரைப்பக்கம் மட்டுமே போடப்பட்டது.

ஆட்சியை பிடிக்கணுமே
இந்த தேர்தலை பொறுத்த வரை, திமுக எப்பாடு பட்டாவது ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் இப்போதே பணத்தை வாரி இறைக்கத் தொடங்கியிருக்கிறதாம்.

ரூ. 50 கோடி செலவு
நாளிதழ்களில் ஒரு நாள் விளம்பரத்துக்கே 18 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 3 நாட்கள் விளம்பர கணக்கையும் சேர்த்தால் ரூ.50 கோடிக்கும் மேல் செலவாகியிருக்கும் எனவும் கூறப்படுகிறது. டிவியில் வெளியாகும் விளம்பரங்கள் வேறு கணக்கு என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

அன்புமணி விளம்பரங்கள்
இந்த நிலையில் இன்றைய காலை பேப்பரில் இதுபோன்ற விளம்பரம் எதுவும் வெளியாகவில்லை. முதல் இரண்டு பக்கத்தை அன்புமணி ராமதாசும், அரசு விளம்பரமும் பிடித்துக்கொண்டது.

ரெஸ்ட் விட்டு அடிப்போம்
இதனால் இரண்டு நாட்களுக்கு ரெஸ்ட் விட்டு அடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறதாம் திமுக தரப்பு. எல்லாம் தேர்தல் தேதி அறிவிக்கும் வரைக்கும்தான். அப்புறம் இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிட முடியாதே என்பதால்தான் இப்போது அரசியல் களத்தில் பரபரப்புத் தீயை பற்றவைத்துள்ளது திமுக.

சட்டம் ஒழுங்கு அவுட்
இன்றைய விளம்பரத்தை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டுவிட்டரில் உலாவ விட்டுள்ளனர். இதில் ஆலுமா டோலுமா சட்டம் ஒழுங்கு அவுட்டும்மா என்று கூறும் அந்த விளம்பரத்தில் 4 ஆண்டுகளில் 7,805 கொலைகள், 21,427 பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 49,839 திருட்டு சம்பவங்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். கடையில் வழக்கம் போல என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்றும் பஞ்ச் வைத்துள்ளனர்.
திமுகவினருக்கே வார்த்தை பஞ்சமா? சினிமா பஞ்ச் டயலாக்கை தழுவி பிரச்சாரம் தேவையா?! என்று கேட்கின்றனர் நடுநிலையாளர்கள்.

திருப்பி அடிப்போம்ல...
இதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளாத அதிமுக தரப்போ வழக்கம் போல வாட்ஸ் அப், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு திமுகவினரை கிண்டலடித்து வருகின்றனர். கூடவே நெட்டிசன்களும் மீம்ஸ்களை தட்டி எறிகின்றனர்.

கொட்டிக்கிடக்கும் காசு
கடந்த மழை வெள்ளத்தின் போது திமுக ஒரு கோடி நிதியளித்தது. தற்போது பத்திரிகை விளம்பரத்துக்காகவே ரூ. 50 கோடி ரூபாய் வரை செலவழித்தால் அந்த கட்சியிடம் எவ்வளவு பணம் கொட்டி கிடக்கும். அத்தனையும் தமிழக மக்களை சுரண்டி சம்பாதித்த பணம் என்று தேர்தல் நேரத்தில் அதிமுக தரப்பு தோசையை திருப்பி போட தயாராகி வருகிறதாம்.
யாருக்கு முடியப்போகுதோ? யாருக்கு விடியப்போகுதோ? சொந்த காசுல சூனியம் வச்சிக்கட்ட கதை இதுதானோ?!












Click it and Unblock the Notifications