திமுக- எஸ்டிபிஐ தொகுதிப் பங்கீட்டு பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சியுடன் இன்று திமுக தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தியது. இருப்பினும் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. மீண்டும் திமுகவுடன் பேசுவோம் என்று எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.
திமு கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இக்கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது.

இதில் முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடந் பேச்சு நடத்தி 5 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து மனித நேய மக்கள் கட்சியுடன் பேச்சு நடத்தி 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் அடங்கிய குழுவினர் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மீண்டும் அவர்கள் வரவுள்ளனர்.
இந்த நிலையில் இன்று எஸ்டிபிஐ கட்சியுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. எஸ்டிபிஐ கட்சி சார்பில் அதன் தலைவர் தெஹ்லான் பாகவி தலைமையிலான குழு திமுக குழுவை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெஹ்லான் பாகவி பேசினார். அப்போது அவர் கூறுகையில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவின் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுடன் இன்று தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசினோம். இதில் பேச்சுவார்த்தை முடியவில்லை.
நாங்கள் சில தொகுதிகளை கேட்டிருந்தோம். அவர்கள் சில தொகுதிகளைக் கூறியுள்ளனர். இதுதொடர்பாக எங்களுக்குள் நாங்கள் பேசி விட்டு மீண்டும் வருவோம். மீண்டும் பேச்சுவார்த்தைத் தொடரும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு காணப்படும். திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பிரச்சினை எதுவும் இல்லை என்றார் பாகவி.












Click it and Unblock the Notifications