ஐந்தில் ஒன்று.. கிடைத்தால் நன்று... திமுகவில் சீட் கேட்கும் முன்னாள் டிஜிபி ஜான் நிக்கல்சன்!
சென்னை: முன்னாள் டிஜிபி ஜான் நிக்கல்சன் திமுகவில் ஐந்து தொகுதிகளைக் குறிப்பிட்டு ஏதாவது ஒன்றில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கேட்டுள்ளார்.
திமுக நேர்காணல் ஒரு திருவிழா போல நடந்து வருகிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத வகையில் அதேசமயம் ஆர்வத்திற்கு சற்றும் குறைச்சல் இல்லாமல் அமைதியான முறையில் நடந்து வருகிறது நேர்காணல்.
நேற்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.
யார் யார்?
நேற்றைய நேர்காணலில் பலர் புதுமுகங்களாக இருந்தாலும் கூட பல பழைய முகங்களையும் காண முடிந்தது
நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி. ஆஸ்டின் உள்ளிட்டோர் மனு செய்திருந்தனர்.
மாஜி டிஜிபி ஜான் நிக்கல்சன்
அதேபோல ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. ஜான் நிக்கல்சன் பத்மநாபபுரம், பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, தென்காசி ஆகிய 5 தொகுதிகளுக்கு விருப்பமனு கொடுத்து இருந்தார்.
திமுக கரை வேட்டையில்
நேற்றைய நேர்காணல் நிகழ்ச்சியில் அவர் திமுக கரை வேட்டி கட்டி கலந்து கொண்டது பார்க்க வித்தியாசமாக இருந்தது.
மாலையில் சில மாவட்டங்கள்
நேற்று மாலை 4 மணி முதல், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் மாலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்த 204 பேரிடம் நேர்காணல் நடைபெற்றது.
இன்றைக்குத் தள்ளி வைக்கப்பட்ட 6 மாவட்டங்கள்
நேற்று நெல்லை, குமரி மட்டுமே நேர்காணலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால், தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் போட்டியிட விருப்பமனு செய்தவர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெறுகிறது.