அன்று கருவின் குற்றம் கவிதையால் உடைந்தது திமுக... இன்று கனிமொழியின் மெளனம் கனக்கும் கவிதை?
சென்னை: திமுகவில் 1990களில் பெரும் பிரளயத்துக்கும் பிளவுக்கும் காரணமாக இருந்தது நாஞ்சில் மனோகரனின் கருவின் குற்றம் கவிதை. இப்போது மெளனம் கனத்து கிடக்கிறது கவிதை மூலம் மீண்டும் கலகக் குரலை கனிமொழி எழுப்புகிறாரோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
1992-ல் திமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை தொடுகிறது. வைகோ ஓரம்கட்டப்படுகிறார். வைகோவுக்கு ஆதரவான குரல்கள் சன்னமன தொனியில் வெளிவந்து கொண்டிருந்தன.
அப்போது கருவின் குற்றம் என்ற தலைப்பில் கருணாநிதியை கடுமையாக சாடி திமுகவின் மூத்த தலைவராக இருந்த நாஞ்சில் மனோகரன் ஒரு கவிதை எழுதினார். இதற்கு போட்டியாக மதுராந்தகம் ஆறுமுகம் ஒரு கவிதை எழுதினார். தமிழக அரசியலில் இது பெரும் பரபரப்பை கிளப்பியது.

நாஞ்சிலார் நீக்கம்- வைகோ ஆவேசம்
இந்த கவிதை யுத்தத்தில் கருணாநிதி மிக காட்டமாகிப் போனார். நாஞ்சிலார் திமுகவைவிட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால் நாஞ்சிலார் மீதான நடவடிக்கைக்கு வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மதிமுக உதயம்
பின்னர் திமுகவில் இருந்து வைகோ 'கொலைச்சதி' குற்றச்சாட்டில் வெளியேற்றப்பட மதிமுக உதயமானது. திமுக தலைமையை கிடுகிடுத்துப் போகும் வகையில் மூத்த தலைவர்கள், கணிசமான மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பலரும் வைகோவுடன் கை கோர்த்தனர்.

ஓரம்கட்டப்பட்ட கனிமொழி
இப்போது திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் இல்லாமல் இருக்கிறார். திமுகவின் தற்போதைய தலைமைக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு எதிர்கோஷ்டி இருக்கிறது. அதேநேரத்தில் கனிமொழிக்கும் முக்கியத்துவம் என்பது இல்லாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார். அண்மையில் கூட கனிமொழி, அதிருப்தியாளர்களை ஓரணியில் திரட்டுகிறார் என கூறப்பட்டது.

அதிரடி கவிதை
இந்நிலையில் கருணாநிதியின் வைரவிழா மேடையில் கனிமொழி அமர்ந்திருக்க அவரது ட்விட்டர் பக்கத்தில் மெளனம் கனத்து கிடக்கிறது என்கிற கருணாநிதி பற்றிய கவிதை வருகிறது. இது கருணாநிதியின் உடல்நலம் பற்றிய கவிதை மட்டுமல்ல.. தாமும் தமது ஆதரவாளர்களும் ஒதுக்கி ஓரம்கட்டப்பட்டு வைக்கப்பட்டிருப்பதை உள்ளக் குமுறலுடன் வெளிப்படுத்தும் கவிதையும் கூட..

இன்னொரு கவிதை யுத்தம்?
கருணாநிதி வைரவிழா நேரத்தில் கனிமொழி வெளியிட்ட இந்த கவிதை திமுகவிலும் கருணாநிதி குடும்பத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்று கருவின் குற்றம்போல வெடித்து கிளம்புமா? கனிமொழியின் மெளனம் கனத்து கிடக்கிறது? கவிதை என்பதுதான் கேள்வி.












Click it and Unblock the Notifications