நீதிபதி நியமன விவகாரம்.. கட்ஜூவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது: திமுக விளக்கம்

கட்ஜூ சொன்னது என்ன?
தமது இணைய பக்கத்தில் நீதிபதி கட்ஜூ தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அந்த இணையப் பக்கத்தில், தமிழகத்தில் நேரடியாக மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், மாவட்ட நீதிபதியாக இருந்த கால கட்டத்தில் தவறு செய்ததற்காக அவருக்கு எதிராக எட்டு புகார்கள் வந்தன. அந்த எட்டு புகார்களையும் சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் அழித்துவிட்டார்.
பின்னர் அவர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நான் நவம்பர் 2004-ல் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றபோது அவர் அப்பதவியில் இருந்தார். அவருக்கு தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஆதரவு இருந்தது. அந்த தலைவருக்கு இவர் மாவட்ட நீதிபதியாக இருந்தபோது ஜாமீன் வழங்கியதால் இந்த ஆதரவு. அத்துடன் இந்த விவகாரத்தில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கை ஐமு கூட்டணி அரசில் இருந்த தமிழக அரசியல் கட்சியின் அமைச்சர் ஒருவர் மிரட்டினார் என்றும் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீதிபதி கட்ஜு குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. அவரது குற்றச்சாட்டில் கட்சியின் பெயரையும், நீதிபதியின் பெயரையும் அவர் நேரடியாக தெரிவிக்கவில்லை. திமுக மீது இத்தகைய குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதற்கு சொந்த விருப்பு, வெறுப்புகளே காரணம்.
நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளதால் இது குறித்து தலைவர் கருணாநிதியிடம் ஆலோசித்துள்ளோம். அவர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பார்.
இவ்வாறு டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications