ஜல்லிக்கட்டுக்காக களம் குதிக்கும் திமுக... அலங்காநல்லூரில் டிசம்பர் 28ல் மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதம்!
சென்னை: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டினை நடத்தக் கோரி அலங்காநல்லூரில் வருகின்ற டிசம்பர் 28ஆம் தேதியன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ஜல்லிக்கட்டு பேரவையினர் இன்று சந்தித்துப் பேசினர். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி டிசம்பர் 28ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். மதுரை அலங்காநல்லூரில் எனது தலைமையில் இந்த போராட்டம் நடைபெறும். திமுக ஆட்சி இருந்திருந்தால் ஜல்லிக்கட்டு நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்றார்.

முன்னதாக அவர், "இந்த மண்ணின் மைந்தர்களின் உணர்வையும், பெருமைகளையும் வெளிப்படுத்தும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டபோது தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டம் 2009 என்ற சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன், ‘‘தமிழ்நாடு ஜல்லிக்கட்டு சட்டப்படி உருவாக்கப்பட்ட பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்காமல் போட்டிகள் நடத்தப்பட்டன'' என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதிமுக அரசின் அலட்சியமே இதற்கு காரணம்" என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications