கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி- சிகிச்சைக்குப் பின் உடல்நிலை சீராக உள்ளது!
நுரையீரல் தொற்று காரணமாக திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி டிசம்பர் 1-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு வாரம் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின்னர் கடந்த 7-ம் தேதி வீடு திரும்பினார். அவர் வீட்டில் ஒய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அவருக்கு திடீரென நோய்த் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக காவேரி மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதனிடையே காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல் நிலை சீராக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமது வாகனத்திலேயே பாதுகாப்பு அதிகாரிகளுடன் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியானதை அடுத்து காவேரி மருத்துவமனை அருகே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திமுக மூத்த தலைவர்கள் துரைமுருகன், பொன்முடி, ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு ஆகியோர் மருத்துவமனைக்கு உடனடியாக வந்தனர்.












Click it and Unblock the Notifications