"ரோலக்ஸ்.." குழந்தைக்கு பெயர் வைக்க சொன்ன பெற்றோருக்கு.. ட்விஸ்ட் கொடுத்த உதயநிதி! என்னாச்சு பாருங்க
தர்மபுரி: தங்கள் குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொன்ன தம்பதிக்கு உதயநிதி கூறிய பதில் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அவர் அந்த பதிலைச் சொன்ன உடன் அங்கிருந்த கூட்டமே அதிர்ந்தது.
தமிழ்நாட்டில் இந்த முறை ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

சில நாட்களில் வாக்குப்பதிவு என்பதால் என்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்படி உதயநிதி சமீபத்தில் தர்மபுரியில் பிரச்சாரம் செய்யும் போது அவர் பேசிய பேச்சு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பெயர்கள்: பொதுவாக ஒரு தலைவர் அல்லது பிரபலத்தின் தீவிர விசுவாசியாக இருப்பவர்கள்.. தங்கள் தலைவர்களின் பெயர்களையே குழந்தைக்கு வைப்பார்கள். அல்லது தலைவர்கள் தங்கள் ஊருக்கு வரும் போது அவர்களிடம் குழந்தையைக் கொடுத்துப் பெயர் வைக்கச் சொல்வார்கள். கடந்த காலங்களில் இதுபோல ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இப்போதும் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கவே செய்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தர்மபுரியில் நடந்துள்ளது.
உதயநிதி: தர்மபுரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மணிக்கு ஆதரவாக உதயநிதி பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் தனது குழந்தைக்குப் பெயர் வைக்கும்படி கேட்கிறார். அப்போது உதயநிதி குழந்தைக்கு என்ன வயது உள்ளிட்ட விஷயங்களைக் கேட்கிறார். அவர் ஏதோ சொல்ல நிச்சயம் ஏற்கனவே பெயர் வைத்து இருப்பீர்கள் என்பது போலப் பார்த்த உதயநிதி, அதன் பிறகு இப்போது குழந்தைக்கு என்ன பெயர் வைத்து இருக்கிறீர்கள் என்ற கேட்கிறார்.
ரோலக்ஸ்: அதற்குக் கீழே இருந்து பெற்றோர் ரோலக்ஸ் என்று சொல்லி இருக்கிறார்கள். உடனே அமைச்சர் உதயநிதி, "ரோலக்ஸா.. சூப்பர் பெயர்.. ரோலக்ஸ் என்றே இருக்கட்டும்" என்று சொல்கிறார். அமைச்சர் உதயநிதியின் இந்த பதிலைக் கேட்டவுடன் அங்கிருந்த கூட்டத்தில் இருந்து பயங்கர கரகோஷம் எழுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ரோலக்ஸ் என்பது கமல் நடிப்பில் வெளியான "விக்ரம்" படத்தில் போஸ்ட் கிளைமேக்ஸில் வரும் சூர்யா கதாபாத்திரத்தின் பெயராகும். சூர்யா முதல்முறையாக நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது அவரது அட்டகாசமான லுக் எனப் பல காரணங்களுக்காக இந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் பேசப்பட்டது. இதன் காரணமாகவே உதயநிதி அப்படி சொன்னதும் கூட்டமே அதிர்ந்தது.
திமுக கூட்டணி: இந்த லோக்சசபா தேர்தலில் திமுக வலிமையான கூட்டணியை அமைத்துள்ளது. இந்தியா கூட்டணி அப்படியே இங்கு இருக்கிறது. திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக எனப் பல கட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன. தமிழக்தில் மற்ற கட்சிகளை விட முதலில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து பிரச்சாரத்தை ஆரம்பித்த கட்சி என்றால் அது திமுக தான்.
தர்மபுரி லோக்சபா தொகுதியைப் பொறுத்தவரை இந்த முறை திமுக சார்பில் மணி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் அசோகன் போட்டியிடும் நிலையில், பாஜக கூட்டணியில் பாமகவில் இருந்து அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். இதன் காரணமாக அங்கே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் அங்கு திமுக கூட்டணியில் இருந்து போட்டியிட்ட செந்தில்குமார் 5.7 லட்சம் வாக்குகளைப் பெற்று சுமார் 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக தலைவர் அன்புமணி 5 லட்சம் வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications