தேர்தல் அறிக்கை, வேட்பாளர் தேர்வில் மாற்றம்.. வாக்காளர்களை கவர அதிரடி திட்டங்களோடு வருகிறது திமுக
சென்னை: நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் முழு பலத்தோடு வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியிலுள்ள திமுக, தனது தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் தேர்வில் புதுமைகளை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஆட்சிக்கு முடிவுகட்டி, மீண்டும் தங்கள் ஆட்சியை கொண்டுவர திமுக கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், இம்முறை, திமுக, அதிமுக கூட்டணிகளை தவிர்த்து, மக்கள் நல கூட்டணி, பாஜக கூட்டணி என தேர்தல் களம் பல கூட்டணிகளை பார்க்க உள்ளதாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில், ஜெயலலிதா அரசுக்கு எதிரான எதிர்ப்பு ஓட்டுக்கள், திமுகவுக்கு முழுமையாக வந்தடைவதில் சிக்கல் உருவாகியுள்ளது. இதை உணர்ந்து, தேர்தல் அறிக்கையிலும், வேட்பாளர் தேர்விலும், மிகுந்த கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது திமுக.

கதாநாயகன்
2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன் என அழைக்கப்பட்டது. அந்த அளவுக்கு கவர்ச்சிகர இலவச திட்டங்கள் அதில் அறிவிக்கப்பட்டன. இந்த சூத்திரம் வெற்றியை பெற்று, கருணாநிதியை அரியணையில் அமர்த்தியது.

அதிமுகவும் அதேபோல
இதன்பிறகு 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவும், லேப்டாப் உள்ளிட்ட கவர்ச்சிகர இலவச திட்டங்களோடு மக்களை சந்தித்தது. திமுகவும் வழக்கம்போல தேர்தல் அறிக்கையை தயாரித்திருந்தது. அதை கதாநாயகி என கருணாநிதி புகழ்ந்தார். ஆயினும், அதிமுக ஆட்சியை பிடித்தது.

மேம்பட்ட தேர்தல் அறிக்கை
இதையெல்லாம் கருத்தில் கொண்டு, இம்முறை, அதிமுக தேர்தல் அறிக்கையைவிட பல மடங்கு அருமையான திட்டங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை உருவாக்க உள்ளது திமுக.

இலவசம்+வளர்ச்சி
இதில் இலவசங்களை மட்டும் அள்ளிவிடும் அறிவிப்புகள் இல்லாமல், ஒட்டுமொத்த வளர்ச்சியை உயர்த்தும் வகையிலான அம்சங்களும் சமச்சீராக இருக்குமாம். தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காகவே, ஒரு பெரிய குழுவை நியமித்து, அதை தமிழகம் முழுவதும் அனுப்பி, தொகுதி வாரியாக மக்களின் குறைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையிலேயே அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இருவகை அறிக்கைகள்
வழக்கமாக ஒரு தேர்தல் அறிக்கை மட்டுமே வெளியிடப்படும் நிலையில், இம்முறை அதிலும் புதுமை செய்து, இந்த முறை மாநிலம் தழுவிய அளவில் ஒரு தேர்தல் அறிக்கையும், அந்தந்த மாவட்டங்களின் தேவைகள் அடிப்படையில் ஒரு தேர்தல் அறிக்கையும் வெளியிட உள்ளனர். அடுத்த மாதம் 2வது வாரத்தில் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளதாம்.

வேட்பாளர் தேர்வு
வேட்பாளர் தேர்விலும், புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது திமுக. சீனியர்களுக்கு மட்டுமே வாய்ப்பு தரப்படுகிறது, முக்கியஸ்தர்கள் சிபாரிசு செய்வோருக்கு மட்டுமே வாய்ப்பு தரப்படுகிறது என்ற குறைபாடு திமுகவில் உள்ளதை களையும் வகையில் இந்த நடைமுறை வருகிறதாம்.

டல் அடித்த வேட்புமனு தாக்கல்
அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட அதிக அளவு வேட்புமனுக்கள் வந்து குவிந்த நிலையில், திமுக சார்பில் போட்டியிட அந்த அளவுக்கு வேட்புமனுக்கள் வரவில்லை. இதற்கு காரணம், சீனியர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆதிக்கம்தான். அவர்கள் கை காட்டுவோருக்கே சீட் என்ற நிலை உள்ளது. இதை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது திமுக.

சீனியர்+ஜூனியர்
இதன்படி, ஒரு மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகள் இருந்தால், அதில் ஒன்றை சீனியருக்கும், மற்ற 3 தொகுதிகளை இளைஞர்களுக்கும், கட்சிக்காக அடிமட்டத்தில் உழைத்துக்கொண்டிருப்போருக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாம். அதுவே ஆறு தொகுதிகள் இருப்பின், 2 தொகுதிகள் சீனியர்களுக்கும், 4 தொகுதிகள் இளைஞர்களுக்கும் வழங்கப்படுமாம்.












Click it and Unblock the Notifications