தமிழகத்தில் திமுக தனித்து ஆட்சி அமைக்கும்: மு.க. ஸ்டாலின் உறுதி
காஞ்சிபுரம்: தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக தனித்து ஆட்சி அமைக்கும் என அக்கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்ட அவர், மாமல்லபுரத்தில் மீனவர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தாம்பரத்தில் நடைபயணம் மேற்கொண்ட அவர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார். நமக்கு நாமே பயணம் மூலம், பல்வேறு தரப்பினரும் முன் வைத்துள்ள கோரிக்கைகள் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா நினைவு இல்லம்
அறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்துக்குச் சென்ற அவர், அங்கு அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர், தனியார் திருமண மண்டபத்தில் நெசவார்கள் மற்றும் சாயப் பட்டறை தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நெச வாளர்களின் குறைகளை கேட்ட றிந்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் நெசவாளர் முன்னேற்றத்துக்கான அனைத்து நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் கிடப்பில் வைக்கப் பட்டுள்ள பட்டு பூங்கா திட்டம் துரிதமாக நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார். பின்னர், நகரப்பகுதியில் முக்கியப் பிரமுகர்களை சந்தித்து பேசினார்.
உத்திரமேரூர்
காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் சாலையில் நேற்று நடைபயணம் மேற்கொண்டார். சுமார் 2 கி.மீ., தொலைவு நடந்து சென்றார். பின்னர், வாகனத்தில் உத்திரமேரூர் பகுதிக்குச் சென்ற அவர், அங்கிருந்த சோழர்கால குடைவோலை முறை குறித்த கல்வெட்டினை தாங்கி நிற்கும் கோயிலை பார்வையிட்டார்.
நெருக்கடி நிலை
செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘தமிழகத்தில் மது விலக்கு கொண்டு வரவும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்கள் மீது அரசு நெருக்கடி நிலையை ஏற்படுத்தி வருகிறது.
மக்களிடையே எழுச்சி
இந்தப் பயணத்தை பொறுத்த வரையில் மக்களிடையே எதிர் பார்ப்பு, எழுச்சி மற்றும் வேகம் ஏற்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்களை பற்றி கவலைப்படமல் முதல்வர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதும், சொத்துக்களை வாங்கி குவிப்பதும்தான் இந்த எழுச்சிக்குக் காரணம்.
கூட்டணி ஆட்சி
கடந்த 1980ம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தொகுதிகள் சரிபாதியாக பங்கிட்டு களம் கண்டோம். ஆனால், அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. கடந்த கால சான்றாக இந்த ஒரு சம்பவம் மட்டுமே போதுமானது தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்பதை நிரூபிப்பதற்கு" என்றார்.
தனித்து ஆட்சி அமைப்போம்
சட்டசபைத் தேர்தலில் பன்முனைப் போட்டி ஏற்பட்டால் அது முடிவுகளில் மோசமாக எதிரொலிக்கும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. திமுக தேர்தலை தனித்து எதிர்கொண்டு வெற்றி கண்டு ஆட்சி அமைக்கும் என்று உறுதியாக கூறினார் ஸ்டாலின்.