பேச வாய்ப்பு தருவதில்லை, அதனால்தான் வெளிநடப்பு செய்கிறோம் - கருணாநிதி
சென்னை: முக்கியப் பிரச்சினைகளைப் பேச சட்டசபையில் எங்களுக்கு வாய்ப்பு தரப்படுவதில்லை. இதனால்தான் வெளிநடப்பு செய்யும் நிலை ஏற்படுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையின் இந்த வருடத்தின் முதல் கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நான்கு நாட்களுக்கு அதாவது வருகிற திங்கள்கிழமை வரை இது நடைபெறும்.
நேற்று ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேச முற்பட்டார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

அதன் பின்னர் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் சட்டசபை திமுக உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. இதில் தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு, மக்கள் பிரச்சினைகளை எவ்வாறு எடுத்து உரைப்பது என்றும், எந்த பிரச்சினையாக இருந்தாலும், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஓர் அணியாக செயல்பட வேண்டும் என்றும், மக்கள் பிரச்சினையை எடுத்து கூற முடியாத பட்சத்தில் வெளிநடப்பு செய்யலாம் என்றும், முடிந்தவரை சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்து வெளியில் வந்த கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கேள்வி: ஆளுநர் உரை மீதான விவாதத்தில் உங்களுடைய கட்சி உறுப்பினர்கள் எதை எதை முன் வைத்து உரையாற்றுவார்கள்?
பதில்: சட்டப்பேரவையில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு தருகிறார்களா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கேள்வி: உங்கள் கட்சிதான் முக்கிய கட்சி, நீங்கள் பேரவையில் அடிக்கடி வெளிநடப்பு செய்து விடுவதால், முக்கிய பிரச்சினைகள் பற்றி கருத்துகளை சொல்ல முடியாமல் போகிறதே?
பதில்: முக்கிய பிரச்சினைகளை கூற வாய்ப்பு கிடைக்காத நிலையில்தான் எங்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய நேரிடுகிறது.
கேள்வி: சட்டப்பேரவையில் நீங்கள் கலந்து கொள்ள சிறப்பு இருக்கை ஒதுக்க வேண்டும் என்று இப்போது கேட்கப்பட்டுள்ளதா?
பதில்: அவர்கள் அதைத் தருவதில்லை என்று முடிவு எடுத்து விட்டார்கள். எனவே, அதை அவர்களிடத்திலே மீண்டும் மீண்டும் கேட்க விரும்பவில்லை.












Click it and Unblock the Notifications