நத்தம் தொகுதியில் முதல் முறையாக உதித்த உதயசூரியன்.. உற்சாகத்தில் திமுக
திண்டுக்கல்: நத்தம் சட்டசபை தொகுதியில் முதல் முறையாக திமுக வெற்றி பெற்று உதயசூரியனை உதிக்க செய்துள்ளது அக்கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டசபை தொகுதியில் 1977 முதல் 2011-ம் ஆண்டு வரை சட்டசபை தேர்தல்களில் திமுக நேரடியாக போட்டியிட்டு வென்றதே கிடையாது. 1977-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் ஆண்டி அம்பலம் தான் தொடர்ச்சியாக வென்று வந்தார்.
1996-ம் ஆண்டு அவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டும் வென்றார். 7 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ஆண்டி அம்பலத்தின் மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தல் தொடங்கி 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரை அதிமுகவின் நத்தம் விஸ்வநாதனே தொடர்ச்சியாக வென்று வந்தார்.
மறைந்த ஆண்டி அம்பலத்தின் மகன் ஆண்டி அம்பலம், 1998-ல் தமாகா வேட்பாளராக போட்டியிட்டு தோற்றார். 2006 தேர்தலில் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டு 3,500 வாக்குகளில் தோல்வியைத் தழுவினார். 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட ஆண்டி அம்பலம் 29,000 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
தற்போதைய சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளராக மீண்டும் ஆண்டி அம்பலம் களமிறக்கப்பட்டார். அங்கு அதிமுகவின் வேட்பாளராக ஷாஜஹான் நிறுத்தப்பட்டார். நத்தம் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் இம்முறை திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் நிறுத்தப்பட்டார். அங்கு அவர் தோல்வியைத் தழுவினார்.
நத்தம் தொகுதியில் இந்த தேர்தலில் 2,110 வாக்குகளில் திமுகவின் வேட்பாளர் ஆண்டி அம்பலம் வென்று சாதனை படைத்துள்ளார். நத்தம் தொகுதியில் திமுக இதுவரை வெற்றி பெறாததால் திண்டுக்கல் மாவட்டத்தில், உதயசூரியன் உதிக்காத தொகுதி நத்தம் என கிண்டல் செய்யப்படுவது உண்டு. தற்போது நத்தத்தின் சரித்திரத்தில் உதசூரியன் உதயமாகிவிட்டதாக பெருமிதப்படுகின்றனர் திமுகவினர்.