லோக்சபா தேர்தலில் திமுக 2 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது: பொன். ராதாகிருஷ்ணன்
சிவகங்கை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக 2 தொகுதிகளில் கூட வெற்ற பெறாது என்று பாஜகவின் தமிழக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த திருமண விழா ஒன்றில் பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் ஏராளமான தமிழர்களை கொலை செய்து குவித்த ராஜபக்சேவுடன் சேர்ந்து காங்கிரஸ் அரசு செய்த படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தல் இருக்கும். 10 ஆண்டுகளாக நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவரது சிவகங்கை தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. ஆனால் மோடியை மட்டும் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரானவர் என்கிறார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன என்பது அனைவரும் அறிந்ததே. முல்லை பெரியாறு பிரச்சனை மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி எல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. இப்படிப்பட்ட அவருக்கு மோடியை பற்றி பேச தகுதியே இல்லை. மோடி பிரதமர் ஆனால் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண்பார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவால் இரண்டு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது என்றார்.