புகைப்படம், பட்டம், பகட்டு வேண்டாம்... எளிமை போதும் - உதயநிதி ஸ்டாலின்
சென்னை: தாம் பங்கேற்காத நிகழ்ச்சிகளில் கட்சியினர் தனது புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், தமக்கு பட்டப்பெயர்கள் சூட்டுவதை கட்சியினர் தவிர்க்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

ஆட்சியின் அவலம்
பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மதவெறி கும்பலுக்கு திமுகவினர் தீனி போட்டுவிடக்கூடாது என்பதே தனது எண்ணம் என்றும், திமுக சுவரொட்டிகளில் இடம்பெறும் தனது புகைப்படத்தை பற்றி விவாதித்து ஆட்சியின் அவலங்கள் திசை திருப்பப்படுவதாக உதயநிதி கூறியுள்ளார்.

உதயநிதி கோரிக்கை
திமுக இளைஞரணியினர் கட்டுபாடுடன் நடந்து கொள்வது அவசியம் எனவும், இனி தான் சம்பந்தப்படாத, கலந்துகொள்ளாத நிகழ்ச்சிகளில் தனது புகைப்படத்தை கட்சியினர் யாரும் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர், மு.க.ஸ்டாலின் ஆகியோர் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் எனக் கோரியுள்ளார்.

தர்மசங்கடம்
மூன்றாம் கலைஞர், திராவிட தளபதி, திராவிட கலைஞர், இளம் தலைவர் போன்ற பட்டப்பெயர்கள் வைப்பதை எந்த வகையில் சேர்ப்பதென்றே தனக்கு தெரியவில்லை எனவும், இனி இதுபோன்று அழைத்து தன்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்க மாட்டீர்கள் என தாம் நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விஷச்சூழல்
தன்னை பற்றி கட்சியினரும், கட்சியினரை பற்றி தானும் புரிந்துகொள்ள பட்டாசு, பட்டம், புகைப்படம் தேவையா என்ன? என உதயநிதி வினவியுள்ளார். பொய்யர்கள் இரைச்சல் அதிகரித்துள்ள இந்த விஷச்சூழலில் விளம்பரங்களை தவிர்த்து ஆக்கப்பூர்வ பணியில் ஈடுபடுவோம் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications