தமிழகத்தில் தேமுதிக - ம.ந.கூட்டணி உள்பட எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: ஆம் ஆத்மி அறிவிப்பு !
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி உள்பட எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு தருமாறு கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ ஆம் ஆத்மி கட்சியினரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை தி.நகரில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வைகோ நேற்று சென்றார். அங்கு அந்தக் கட்சியின் நிர்வாகி வசீகரனை சந்தித்து கூட்டணியில் சேர அழைப்பு விடுத்தார். அப்போது ஆம் ஆத்மியின் ஆதரவு கேட்டு அதன் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஒரு கடிதத்தையும் அளித்தார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் சோம்நாத் பாரதி, வைகோவுக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் ஆம் ஆத்மி கட்சி தற்போதைய நிலையில் தமிழகத்தில் யாருக்கும் ஆதரவு அளிக்க இயலாத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், நீங்கள் எழுதிய மார்ச் 31 ஆம் தேதியிட்ட கடிதம் கிடைத்தது. ஆம் ஆத்மி கட்சி தமிழக அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஊழலுக்கு எதிரான போராட்டங்களாலே ஆம் ஆத்மி கட்சி எழுச்சி பெற்றது உங்களுக்கு தெரியும். இந்திய அரசியலில் ஊழலே பிரதானமாக இருக்கும் நிலையில், அதை அறவே நீக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி செயல்பட்டு வருகிறது.

எனவே, தற்போதுள்ள அரசியல் செயல்முறைகள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஆம் ஆத்மி விரும்புகிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழகத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கோ, கூட்டணிக்கோ ஆதரவு அளிக்கும் இயலாத நிலையில் ஆம் ஆத்மி கட்சி உள்ளது.
எங்களது தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications