வாசனுக்கு செக்.. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனுக்கு லக்.. ஜெயலலிதா மூவ்!
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மீதான கோபத்தை, அவரது கட்சியில் இருந்து பிரிந்து வந்து அதிமுகவில் ஐக்கியமான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு ராஜ்யசபா சீட் கொடுத்ததன் மூலம் தீர்த்துக்கொண்டார் முதல்வர் ஜெயலலிதா என்று தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ்யசபாவுக்கான தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 4பேர் போட்டியிடுகிறார்கள். பதவி காலம் முடிவடையும் எம்.பியான, நவநீத கிருஷ்ணன், மாஜி அமைச்சர் வைத்திலிங்கம், கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி விஜயகுமார் ஆகியோரை வேட்பாளர்களாக்கியுள்ளதோடு, யாரும் எதிர்பார்க்காதவிதமாக கடந்த மாதம்தான் கட்சியில் இணைந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தையும் வேட்பாளராக்கியுள்ளார் ஜெயலலிதா.

தேர்தலுக்கு சற்று முன்பாக, கடந்த மாதம் இவர் அதிமுகவில் இணைந்திருந்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மக்கள் நல கூட்டணியோடு கூட்டணி வைத்து கொண்டது பிடிக்காமல் அவர் அதிமுக பக்கம் போனார்.
அதிமுகவுடன், த.மா.காவை கூட்டணி அமைக்க செய்ய பாலசுப்பிரமணியன் பெரிதும் முயன்று வந்தார். ஆனால், 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்க ஜெயலலிதா முடிவு செய்திருந்ததால், வாசன் கட்சியும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அறிவுறுத்தினார் ஜெயலலிதா.
காங்கிரசில் இருந்து பிரிந்து வந்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் கட்சியை தொடங்கி, தென்னந்தோப்பு சின்னத்தை பெற்றிருந்த வாசனால், ஜெயலலிதா கன்டிஷனுக்கு ஒத்துக்கொள்ள முடியவில்லை. 15 தொகுதிகளும், ஒரு ராஜ்சபா பதவியும் தருகிறேன் என்று கூறியும் வாசன் ஒப்புக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியிருந்தது.
கூட்டணி பேச்சுவார்த்தையின்போதே மக்கள் நல கூட்டணி பக்கம் போன வாசனால் ஜெயலலிதா எரிச்சலடைந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால், எஸ்.ஆர்.பிக்கு உடனடியாக ராஜ்யசபா பதவியை தூக்கி தந்துள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications