ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்.. தனியார் ஓட்டலில் மாணவியுடன்.. சிக்கியது எப்படி?
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் டாக்டருக்கு படிக்கிறார்கள். இங்கு பயிலும் வடமாநிலத்தைச் சேர்ந்த 22 வயது மாணவி, கடந்த சில நாட்களாக தேர்வில் வெற்றி பெறுவதற்கு தடுமாறி உள்ளாராம். இந்நிலையில் மாணவியை தேர்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி, போதைப்பொருள் பயன்படுத்தி எல்லை மீறியதாக டாக்டர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருக்கிறது. இந்த கல்லூரியில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்பிபிஎஸ் படித்து வருகின்றனர். இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த 22 வயது மாணவியும் படித்து வருகிறார். இவர் அண்மையில் தேர்வில் வெற்றி பெற முடியுமா என சந்தேகத்துடன் இருந்தாராம். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தேர்வில் ஜெயிக்க என்ன செய்வது என்று யோசித்தாராம்.

இந்நிலையில் மாணவி தேர்வில் வெற்றி பெற உதவி செய்வதாக கூறி, அந்த கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர் ஓம் பிரகாஷ் (வயது 44) என்பவர் மாணவியை தனியாக அழைத்து பேசி வந்தாராம்.
இதையடுத்து தேர்வு சம்பந்தமாக பேசுவதற்காக ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு மாணவியை வரவழைத்தாராம். அங்கு வைத்து, தேர்வில் வெற்றி பெற வைப்பதற்காக மேலிடத்தில் பேசி விட்டேன் என்று ஆசைவார்த்தை கூறினாராம். மாணவியை டாக்டர் போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, டாக்டரிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
சத்தம் கேட்டு அங்கு சென்ற ஓட்டல் ஊழியர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தன் தலைமையிலான போலீசார் நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் போதைப்பொருள் பயன்படுத்தி ஓம் பிரகாஷ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும், அதனை செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாம். பின்னர் இந்த வழக்கு ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இதுதொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஓம் பிரகாஷை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஊட்டியில் உள்ள கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான அரசு டாக்டர் ஓம் பிரகாஷ் சென்னையைச் சேர்ந்தவர் என்பதும், ஏற்கனவே 2 திருமணமான நிலையில் 2 மனைவிகளும் உடன் இன்றி தனிமையாக ஊட்டியில் பணியாற்றி வந்தாராம் . இதனிடையே அவர் வேறு மாணவிகளை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாரா? என்ற கோணத்திலும் ஊட்டி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications