டாக்டர் பணியோடு ஐஏஎஸ் பணியும்.. சிவில் சர்வீஸ் முதல் தேர்விலேயே 5வது இடத்தைப் பிடித்து நந்தினி சாதனை
டாக்டருக்கு படித்த சிதம்பரம் நந்தினி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். முதல்முறையாக எழுதிய தேர்விலேயே தமிழக அளவில் 5வது இடத்தில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.
கடலூர்: அகில இந்திய அளவில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்தது.
இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 5.5 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் இத்தேர்வை 18,000 பேர் எழுதினர்.
இந்த முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 15,700 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 1500 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு டிசம்பர் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடந்தது.

தேர்வு முடிவுகள்
இதில் தேர்ச்சி பெற்ற சுமார் 3,000 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். தமிழகத்தில் இருந்து 210 பேர் நேர்முக தேர்வில் பங்கேற்றனர். இந்த நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று இரவு வெளியிட்டது. இதில், அகில இந்திய அளவில் ஆண்கள் 846 பேர், பெண்கள் 253 பேர் என மொத்தம் 1099 பேர் இந்திய சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிதம்பரம் நந்தினி
இதில் கடலூர் சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக்கல்லூரி முதல்வராக உள்ள ஜி.குப்பன், ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி ஆசிரியை குமுதவள்ளி ஆகியோரின் மகள் கே.நந்தினிதேவி இந்திய அளவில் 54வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ வரை படித்தார். பிளஸ் டூ தேர்வில் 1174 மதிப்பெண்கள் பெற்று கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றார்.

டாக்டர் நந்தினி
பின்னர், மதிப்பெண் தகுதி அடிப்படையில் சென்னை எம்.எம்.சி மருத்துவக்கல்லூரி இடம் பெற்று எம்.பி.பி.எஸ் பயின்றார். படித்து முடித்த பின்னர், சிவில் சர்வீஸ் பயிற்சியை கடுமையாக மேற்கொண்டு முதல் நிலைத் தேர்வு எழுதினார்.

5வது இடம் பெற்று சாதனை
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல்களில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 54-வது இடத்திலும், தமிழக அளவில் 5-வது இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் முதல் முறையாக சிவில் சர்வீஸ் தேர்வில் முதன் முறையாக எழுதினார். முதல் முயற்சியிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளது, ஐஏஎஸ் பயிற்சி பெறுவோருக்கு ஊக்கத்தை அளித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications