தஞ்சை அருகே டாக்டர் கொலை வழக்கில் திருப்பம்.. பெற்ற மகளே கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலம்
குடும்பத்தை கவனித்துக் கொள்ளாத மருத்துவரான தந்தையை கூலிப்படையை ஏவி சொந்த மகளே கொன்ற கொடூரம் தஞ்சை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
தஞ்சை: மருத்துவராக இருந்து குடும்பத்தை கவனித்துக் கொள்ளாத தந்தையை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக அவரது மகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தஞ்சை மாவட்டம், பாப்பாநாடு அருகே நெம்மேலி திப்பியக்குடியைச் சேர்ந்தவர் ராசப்பன் ( 69) . மருத்துவரான இவர் ஒரத்தநாட்டில் கிளீனிக் நடத்தி வந்தார். இவரது மனைவி மணிமாலா, மகள்கள் தீபிகா, அம்பிகா, மகன் கோகுல் ஆகியோர் சென்னையில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராசப்பன் கிளீனிக்கிலிருந்து வீட்டுக்கு திரும்பியபோது மர்மநபர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

தீபிகாவுக்கு தொடர்பு
விசாரணையில் ராசப்பனின் மகள் தீபிகாவுக்கு இந்த கொலையில் தொடர்பிருக்கலாம் என தெரியவந்தது. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் தீபிகா, போலியோவால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் செயலிழந்தவராவார்.

தந்தை குறித்து புகார்
இவருக்கு தன்னுடன் வேலை பார்க்கும் நாகை இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் ஊனமுற்ற நிலையிலும் தான் குடும்பத்தை காப்பாற்ற போராடி வரும் நிலையில் தனது தந்தை குடும்பத்தை கவனிப்பதில்லை என்று அந்த இளைஞரிடம் தீபிகா கூறியதாக தெரிகிறது.

தந்தையை கொல்ல திட்டம்
இதைத் தொடர்ந்து தந்தையை கொன்றுவிடலாமா என்று அந்த இளைஞர் கேட்டதற்கு சரி என்றாராம் தீபிகா. இருவரும் ராசப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். பின்னர் இருவரும் கூலிப்படையை ஏவி ராசப்பனை கொலை செய்தது தெரியவந்தது.

போலீஸார் விசாரணை
இதையடுத்து போலீஸார் தீபிகாவிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள நாகையைச் சேர்ந்த இளைஞர் மற்றும் கூலிப்படையினரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications