ஓபிஎஸ்ஸை கைவிடலயாமே டெல்லி.. எடப்பாடிக்கு ‘மெசேஜ்’! டாப் ‘தலை’ பேச்சில் அந்த பாயிண்டை கவனிச்சீங்களா?
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக தலைமை கைவிடவில்லை, இன்னும் சான்ஸ் இருக்கிறது, அமித் ஷாவின் பேச்சு அதைத்தான் காட்டியுள்ளது, எடப்பாடி பழனிசாமிக்கு அமித் ஷா மெசேஜ் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து, அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு அதில், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையமும் அவரை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது.

எடப்பாடி - அமித் ஷா : இதற்கிடையே கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்து பேசினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து பேசியதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் எனவும் கூறினார்.
டெல்லியில் நடைபெற்ற ஆலோசனையின்போது, ஒன்றுபட்ட அதிமுகவாக இருக்க வேண்டும். அதிமுகவுக்கு என இருக்கும் செல்வாக்கை வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமித் ஷா, எடப்பாடி டீமுக்கு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக பலமுறை வலியுறுத்திவிட்டது.

ஈபிஎஸ் பிடிவாதம் : ஆனால் ஓபிஎஸ்ஸை மட்டும் சேர்த்துக்கொள்ளவே முடியாது என பிடிவாதமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் தனக்குத்தான் செல்வாக்கு உள்ளது. ஓபிஎஸ் பக்கம் நிர்வாகிகள் ஆதரவே இல்லை. வரும் தேர்தல்களில் நிரூபித்து காட்டுகிறேன். எனது தலைமையிலான அதிமுகவால் பாஜகவும், பாஜகவால் அதிமுகவும் பலனடையும் என எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவுக்கு பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில், அதிமுக உட்கட்சிப் பிரச்சனையில் பாஜக தலையிடாது என அமித் ஷா கூறியுள்ளார். இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ள அமித் ஷா, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே உள்ள பிரச்சனையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அது உட்கட்சி விவகாரம். அவர்கள் இருவரும் பேசி சுமூக முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

எடப்பாடிக்கு டாப் மெசேஜ் : அதிமுக உட்கட்சிப் பிரச்சனையில் பாஜக தலையிடாது எனக் கூறியதோடு விடாமல், இருவரும் பேசி சுமூக முடிவை எடுக்க வேண்டும் என அமித் ஷா கூறியுள்ளது தான் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்பிற்கு சற்றே ஆறுதல் அளித்துள்ளது.
டெல்லி சந்திப்பு நடைபெற்ற சில நாட்களிலேயே, அமித் ஷா இவ்வாறு பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி ஏற்காவிட்டாலும், அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் இருப்பதையே அமித் ஷா வெளிப்படுத்தி இருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். எடப்பாடி பழனிசாமிக்கு மேலிடம் கொடுக்கும் மெசேஜ் இது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications