சிறுத்தைப் புலிக்கு வைத்த கூண்டில் தூங்கிய நாய்கள்... வனத்துறை அதிகாரிகள் விரட்டியடித்தனர்
தாம்பரம் பீர்க்கன்கரணை அடுத்து உள்ளது சதானந்தபுரம். சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதிக்கு அருகில் வண்டலூர் உயிரியல் பூங்காவையொட்டிய வனப் பகுதி அமைந்துள்ளது. சதானந்தபுரத்தை அடுத்து நெடுங்குன்றம் கிராமம் உள்பட பல கிராமங்கள் உள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வன ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள பீர்க்கன்கரணை நெடுங்குன்றம் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார் சதானந்தபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர். அப்போது மான் ஒன்று வேகமாக சாலையைக் கடந்ததை அவர் கண்டுள்ளார். உடனடியாக மான் ஓடிவந்த திசையில் காட்டுக்குள் பார்த்த போது, அங்கு சுமார் 2 அடி உயரம் 3 அடி நீளத்தில் ஒரு சிறுத்தை புலி நின்றதாகவும், ரமேசைப் பார்த்து அது மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடிச் சென்று மறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார் ரமேஷ். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வன அதிகாரி கிருஷ்ணகுமார் தனது குழுவுடன் சிறுத்தை புலியின் கால் தடம் எதுவும் பதிவாகி உள்ளதா என்று பார்த்தார். ஆனால், எதுவும் சிக்கவில்லை.
வண்டலூர் பூங்காவில் இருந்து சிறுத்தைப் புலி தப்பி வந்திருக்குமோ என்ற அப்பகுதி மக்களின் சந்தேகத்திற்கு வன அதிகாரி கிருஷ்ணகுமார், அவ்வாறு தப்பி வர வாய்ப்பில்லை எனப் பதிலளித்தார்.
மேலும், பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்திய அவர், சிறுத்தை புலியை பிடிக்க விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும் இடம் அருகே 2 கூண்டுகளும், பல இடங்களில் கண்காணிப்பு கேமராவும் பொருத்த ஏற்பாடு செய்தார். மேலும், வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகள் அருகே சேற்றுக்குவியலும் அமைக்கப் பட்டது.
இந்நிலையில், நேற்று கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்வையிட்டதில் சிறுத்தைப் புலி நடமாட்டம் பதிவாகவில்லை. எனவே இரும்புக் கூண்டிலாவது சிறுத்தைப் புலி சிக்கி இருக்கிறதா என ஆய்வு செய்ய சென்றுள்ளனர் வனத்துறை அதிகாரிகள்.
அப்போது, சிறுத்தைப் புலிக்கென வைக்கப் பட்ட இரும்புக் கூண்டில் மூன்று நாய்கள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டுள்ளனர். உடனடியாக அவற்றை விரட்டி அடித்த வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் சிறுத்தைப் புலி நடமாட்டம் உள்ளதா எனக் கண்காணித்து வருகின்றனர்.