"அவர பெரிய ஆள் ஆக்காதீங்க.. முதிர்ந்த அரசியல்வாதியா அவரு" அண்ணாமலை குறித்த கேள்வி! கடுப்பான எடப்பாடி
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக இடையே கூட்டணிக்குள் குழப்பம் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், இன்று அண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அண்ணாமலை நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்து திமுகவினர் சொத்து பட்டியல் என்று கூறி எக்செல் சீட் ஒன்றை வெளியிட்டார். அதில் பல திமுக தலைவர்களின் சொத்து குறித்த தகவல்கள் இருந்தது.
இருப்பினும், இதை திமுக தலைவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அண்ணாமலை கூறியதற்கான ஆதாரத்தை வெளியிடவில்லை என்றால் வழக்கு தொடர உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அண்ணாமலை: இது ஒரு பக்கம் இருக்க, விரைவில் தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். ஊழலை எதிர்த்துப் போராடுவது என்று வந்துவிட்டால் ஒரு கட்சியை மட்டும் எதிர்க்க முடியாது.. அனைத்து ஊழல் கட்சிகளையும் எதிர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இது அதிமுக- பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கியது.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அண்ணாமலை கூறியதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே இப்போது அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என்று அவர் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் எடப்பாடி பேசும் போது அண்ணாமலை குறித்த எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "நாளை செயற்குழு கூட்டம் கூட உள்ளது. கர்நாடக தேர்தல் குறித்து நாளை ஆலோசனை செய்ய உள்ளோம். கர்நாடக தேர்தல் குறித்து நாளை முடிவெடுக்க உள்ளோம்" என்றார்.

தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் சசிகலா குறித்துப் பேசிய எடப்பாடி, "ஓபிஎஸ் விரக்தியின் விளம்பிற்குப் போய் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சிற்கு எல்லாம் பில் சொல்ல முடியாது. முதலில் தர்ம யுத்தம் என்றார். இப்போது மீண்டும் மற்றொரு தர்ம யுத்தம் என்கிறார். அவரது தர்ம யுத்தம் எல்லாம் என்ன ஆனது என்று அவரை சுற்றி இருக்கும் அனைவருக்கும் தெரியும். நாட்டு மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரியும்.
வலிமையா இருக்கோம்: அதிமுக இன்று வலிமையாக உள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றவர், இப்போது மீண்டும் ஏதோ அதிமுகவை ஒன்றிணைப்பேன் என்றெல்லாம் சொல்லி வருகிறார். சட்டசபைத் தேர்தலில் எங்களால் எங்கும் வெல்ல முடியாது என்று நினைத்து அப்படிச் சொன்னார். ஆனால், நாங்கள் 70+ இடங்களில் வென்றோம். மேலும், இப்போது அதிமுகவுக்கான ஆதரவும் அதிகரித்தே வருகிறது. அதன் காரணமாகவே அவர் இப்படிப் பேசி வருகிறார்" என்றார்.

கடுப்பான எடப்பாடி: மேலும், அண்ணாமலை குறித்த கேட்டதற்கு, "அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.. கற்பனை கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. எங்க அவரைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் இப்படிப் பேசி பேசி தான் அவர் பெரிய ஆள் ஆகியிருக்கிறார். அவரைப் பற்றியே பேச வேண்டாம். நான் கட்சிக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிறது.
கட்சியில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியும். அவர் சும்மா பேட்டி கொடுத்து பெரிய ஆள் ஆக வேண்டும் என நினைக்கிறார். தயவு செஞ்சு அவர் குறித்து எந்தவொரு கேள்வியும் கேட்க வேண்டாம். அரசியலில் இருப்பவர்களுக்கு அடிப்படை தன்மை தெரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க நான் தயாராகவே இருக்கிறேன். அதை விட்டு விட்டு தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே அவர் இப்படிப் பேசி வருகிறார்.
எதுவும் கேட்காதீங்க: அவர் எதாவது ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் பின்னர் எங்களைப் போலத் தலைவர்கள் அதற்குப் பதிலளிக்க வேண்டிய இருக்கிறது. முதிர்ந்த அரசியல்வாதி கருத்து குறித்துக் கேட்டால் பதில் சொல்லலாம். அவர் குறித்து எந்தவொரு கேள்வியும் கேட்க வேண்டாம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆளும் தரப்பு குறித்துப் பேசிய அவர், "சட்டசபை என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், திட்டமிட்டு நான் பேசுவதை மட்டும் ஒளிபரப்ப மறுக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவரான எனது பேச்சைக் கூட ஒளிபரப்ப மறுக்கிறார்கள். முதல்வர் பேசுவதைக் காட்டும் அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் பேசுவதைக் காட்ட மறுக்கிறார்கள். இதையெல்லாம் சரி செய்ய வேண்டும்.
நாங்கள் பேசுவது பத்திரிக்கைகளில் வருகிறது. ஆனால், நேரடியாக ஒளிபரப்புவதை மறுக்கிறார்கள். அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது தான எங்கள் கடமை. அதைச் சரி செய்வதே ஜனநாயகம். ஆனால், இதில் கூட ஜனநாயகம் இல்லை., இதன் காரணமாகவே எங்கள் பேச்சை ஒளிபரப்ப மறுக்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications