ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தான் வாடகைக் கார் ஓட்டனும்.. அதுக்கு மேல ஓட்டினா லைசென்ஸ் ரத்து!
ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தான் வாடகைக் கார்களை இயக்க வேண்டும் எனவும் மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தான் வாடகைக் கார்களை இயக்க வேண்டும் எனவும் மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகனச்சட்டத்தை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில சாலை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் மிகுந்து கவலையளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு 17218 பேரும், 2017 இல் அக்டோபர் மாதம் வரை 14077 பேரும் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர்.
விபத்துக்கு காரணம்
சாலை விபத்துகள் குறித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில் 90 விழுக்காடு சாலை விபத்துகள் ஓட்டுநர்கள் நீண்ட நேரம் வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் களைப்பு மற்றும் மன உளைச்சலால் ஏற்படுகிறது என தெரியவந்துள்ளது.
சுற்றுலா வாகனங்கள் விபத்து
தமிழகத்தில் சுற்றுலா பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்களே அதிக விபத்துக்குள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை குறைக்கும் வகையில் 1988ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்துத் தொழிலாளர்கள் சட்டம் 1961இல் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட வரையறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீறினால் லைசென்ஸ் ரத்து
அதன்படி ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கு மேல் வாடகைக்கு கார் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. மோட்டர் வாகன சட்டப்படி ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு மிகாமலும், வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கும், ஒருநாள் ஓய்வுடன் வானங்களை இயக்கவும், மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.
விபத்துக்காப்பீடு அவசியம்
சுற்றுலா வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களை ஒரு பணி முடித்த பின்னர் தொடர்ச்சியாக அடுத்த பணி செய்ய வலியுறுத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை மற்றும் தனி நபர் விபத்துக் காப்பீடு அவசியம் வைத்திருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்களை குறைக்க நடவடிக்கை
சட்டவிதிகளை மீறும் வாகனத்தின் அனுமதி சீட்டு மற்றும் தகுதி சான்றிதழ்கள் புதுப்பிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரழப்புகளை குறைக்கும் பொருட்டு சட்ட விதிகள் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.