மூன்று தமிழர் விடுதலை வழக்கை அரசியலாக்காதீர்..: பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள்!!
சென்னை: ராஜிவ் வழக்கில் தொடர்புடைய மூன்று தமிழர் விடுதலை வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்று பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்திருந்தார். வரும் 25-ந் தேதி, தாம் ஓய்வு பெறப் போவதாகவும், அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கோவையில் அவர் கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் கூறியிருப்பது அரசியல் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறினார்.
இந்நிலையில், சென்னையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எந்தத் தவறும் செய்யாத என் மகன் 23 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவிக்கிறார். அவர் இந்த வாரத்தில் விடுதலையாகி விடுவார் என்று நம்பிக்கையோடு இருக்கும் வேளையில், திமுக தலைவர் கருணாநிதி இப்படியொரு கருத்தை கூறியிருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
ஓட்டு அரசியல் எப்போதும் வரும். அதற்காக என் மகனின் வாழ்க்கைப் பிரச்சினையை அரசியலாக்காதீர்கள். என் மகன் விடுதலையாகிவிடுவான் என்ற நம்பிக்கையை முதல்வர் அளித்தபோது, எதைப் பற்றியும் யோசிக்காமல் அவரைச் சந்தித்தேன். அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவர் கூறவில்லை. அந்த சங்கடத்தை முதல்வர் ஜெயலலிதா எனக்கு தரவில்லை.
நல்ல தீர்ப்பு வழங்குவேன் என்று நீதிபதி சதாசிவம் கூறியதில் எந்த அரசியலும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அதற்குள் இப்படியொரு கருத்தை கருணாநிதி வெளியிடப்பட்டிருப்பது, என் மகனின் விடுதலையை தாமதமாக்குமோ என்று பயமாக உள்ளது.
மறுக்கப்பட்ட நீதி கிடைக்கும்வரை அதை பாதிக்கும் எந்தவித அரசியல் கருத்துகளையும் வெளியிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications