சட்டசபையில் என்னை புகழ்ந்து நேரத்தை வீணடிக்காதீர்கள்.. திமுக எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: சட்டசபையில் தன்னை புகழ வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக எம்எல்ஏக்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் அந்தந்த கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் கட்சி தலைவர் குறித்து புகழுரை தெரிவித்து விஷயத்தை பேச ஆரம்பிப்பது வாடிக்கை. அதிலும், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அதிமுக எம்எல்ஏக்கள் அவரை புகழ்வதில்தான், அதிக நேரம் செலவிடுவார்கள். அதிலும், ஒவ்வொருவருமே வித்தியாசமாக புகழ்வதில் போட்டி போடுவதும் உண்டு.
இதை ஜெயலலிதா தடுத்ததில்லை. சில நேரங்களில் மகிழ்ச்சியை தனது முகத்தில் காட்டிக்கொள்வார். சில நேரங்களில் அமைதியாக இருந்து அதை கேட்பார். இந்த புகழ்ச்சிகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எரிச்சலை தருவதோடு, தமிழக சட்டசபையின் நேரத்தை வீணடிப்பதை போல இருந்தது.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தன்னை திமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் புகழ வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். ஒருவரை புகழ்ந்து பேசுவதால் நேரம்தான் விரையமாவதாக குறிப்பிட்டுள்ள அவர், பட்ஜெட் தொடர்பான ஆக்கப்பூர்வ விவாதத்தில் மட்டும் பங்கேற்று, மக்கள் பிரச்சினைகளை மட்டுமே பேச வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.