தமிழகத்திலும் போர் நடத்தும் சூழலுக்கு தள்ளாதீர்கள்: அன்புமணி கடும் எச்சரிக்கை
காவிரி பிரச்சனையில் தமிழக மக்கள் கொந்தளித்து போயுள்ளனர் என்றும் தமிழர்களை போர் நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளாதீர்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக மக்கள் கொந்தளித்து போய் உள்ளனர்,தமிழர்களை போர் நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளாதீர்கள் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் வந்தவாசியில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசுப்பேருந்து இயக்கப்படுவதை கண்டித்து மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சென்னை எழும்பூரில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்புமணி தலைமையில் பி.ஆர். பாண்யடின் மற்றும் பாமகவினர் எழும்பூர் சாலையில் பேரணியாக வந்து இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எழும்பூரில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் போராட்டத்தை கைவிட மறுத்தனர். அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பாமக தொண்டர்கள், விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

உரிமையை விட மாட்டோம்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அனைவரின் ஆதரவுடன் போராட்டம் நடைபெறகிறது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது. காவிரி தமிழகத்தின் உரிமை பிரச்சனை, உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

கர்நாடகாவிற்கு ஆதரவு
கர்நாடகா மக்களுக்கு ஆதரவாக மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இந்திய இறையாண்மைக்கு எதிராக மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக மக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். அந்த ஸ்கீம், இந்த ஸ்கீம் என்றெல்லாம் சொல்லி ஏமாற்ற முடியாது.

மத்திய அரசுக்கு அக்கறையில்லை
மாநில அரசு மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறது. இங்கே இருப்பவர்களுக்கு பதவிதான் முக்கியம். பயந்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு அக்கறையில்லை. அனைத்து கட்சி கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டால் தர மறுக்கின்றனர். இது ஏமாற்று வேலையில்லையா?

வன்முறைக்கு தள்ளவேண்டாம்
கடல் கடந்து தமிழர்கள் போர் நடத்திய வரலாறு உலகுக்கு தெரியும். தமிழர்களை போர் நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளாதீர்கள். வன்முறையின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என்றாலும் ஒரு எல்லைக்கு மேல் அமைதியாக போராட்டங்களை நடத்த முடியாது. எங்களை அடுத்த கட்டத்துக்கு தள்ளிவிடாதீர்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications