தலைவர்கள் வருவதை வைத்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கவலைப்படாதீர்கள்.. லியோனி வேண்டுகோள்!
தலைவர்கள் வருவதை வைத்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கவலைப்பட வேண்டாம் என திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: தலைவர்கள் வருவதை வைத்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கவலைப்பட வேண்டாம் என திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்றிரவு அவசர சிகிச்சை தேவைப்பட்டதை தொடர்ந்து அவர் காவேரி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார்.
எமர்ஜென்சி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது கருணாநிதியின் ரத்த அழுத்தம் சமநிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கருணாநிதி நலமாக உள்ளார், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என அவரது மகளும் திமுக எம்பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், தேசிய தலைவர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் காவேரி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவேரி மருத்துவமனைக்கு சென்ற அக்கட்சியின் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவரது குடும்பத்தாரிடம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தலைவர்கள் வருவதை வைத்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கவலை கொள்ள வேண்டாம்.
வதந்திகளை நம்ப வேண்டாம். திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். மீண்டும் மக்கள் பணியாற்றும் வகையில் கருணாநிதி குணமடைந்து வருகிறார். இவ்வாறு லியோனி கூறினார்.