மீட்கப்பட்ட டோர்னியர் விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்கா செல்கிறது...திங்களன்று ஆய்வு நடத்த முடிவு
சென்னை : மாயமாகி விபத்துக்குள்ளான டோர்னியர் விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்ப முடிவு செய்துள்ளதாக கடலோர காவல்படை கிழக்கு மண்டல ஐ.ஜி.ஷர்மா தெரிவித்துள்ளார்.
அதில் உள்ள தகவல்கள் சேகரிக்கப்பட்டு விபத்துக்கான காரணம் அறிய ஒரு வார காலம் ஆகும் என்றும் அவர் கூறினார்.

ஆபரேஷன் ஆம்லா என்ற பாதுகாப்பு ஒத்திகையின் போது கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் ரக விமானம் கடலூருக்கு 27 கடல்மைல் தென்கிழக்கில், காரைக்காலுக்கு 32 கடல் மைல் வடகிழக்கில் பயணித்த போது திடீரென்று மாயமானது.
அந்த விமானத்தில் பயணம் செய்த விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி, பார்வையாளர் சுபாஷ் சுரேஷ் ஆகிய 3 பேரும் மாயமானார்கள். இதையடுத்து, கடலோர காவல்படையும், இந்திய கப்பற்படை மற்றும் தமிழக கடலோர காவல்படையும் கடந்த மாதம் 9-ந்தேதி முதல் மாயமான விமானத்தையும், விமானிகளையும் தேடும் பணியை தொடர்ந்தன.
இந்த நிலையில் கடலூர் அருகே உள்ள பிச்சாவரம் கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் மற்றும் கருப்பு பெட்டி கடந்த 11 ஆம் தேதி மீட்கப்பட்டது. கருப்பு பெட்டியின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளதால் அதை தயாரித்த கனடாவுக்கு அனுப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கருப்பு பெட்டியை ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்ப உள்ளதாக கடலோர காவல்படை கிழக்கு மண்டல ஐ.ஜி.ஷர்மா தெரிவித்துள்ளார். திங்கட் கிழமை கருப்பு பெட்டியை ஆய்வு செய்யும் பணி தொடங்கும் என்றும், அதில் உள்ள தகவல்கள் சேகரிக்க ஒரு வார காலம் ஆகும் எனவும் அவர் கூறினார்.
கருப்பு பெட்டியின் ஆய்வு முடிவு வெளியான பிறகே விமானம் விபத்துக்குள்ளானது ஏன் என்ற மர்மம் விலகும்.












Click it and Unblock the Notifications