எதிர்பார்க்காத நிலையில் முதல்வர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்: டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல்
ஜெயலலிதா மறைவிற்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா யாரும் எதிர்பார்க்காத நிலையில் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த டாக்டர் கிருஷ்ணசாமியின் இரங்கல் குறிப்பு:
இந்த மறைவுச் செய்தியை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. கடந்த இரண்டு மாதத்தில் அவரது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற போதும் நல்ல செய்திகளே காதுகளுக்கு வந்தன. மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் பேசிய போதும், ஒவ்வொரு நாளும் அவரது உடல் நலம் தேறிவந்ததை தெரிவித்தனர்.
ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக அவரது இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு இன்று நம்மிடத்தில் இருந்து பிரிந்து செல்லக் கூடிய அளவிற்கு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்த இழப்பால் துயரமுற்று இருக்கக் கூடிய அதிமுக தொண்டர்கள், தமிழக மக்கள், உற்றார் உறவினர்கள், உலகமெங்கும் வாழக் கூடிய தமிழ் மக்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.