'வாட்டாள் நாகராஜின் மறு உருவம்' சதனாந்த கவுடாவை டிஸ்மிஸ் செய்ய ராமதாஸ் வலியுறுத்தல் #cauvery
சென்னை: கர்நாடகாவில் தமிழருக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடும் வகையில் பேசி வரும் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவை பிரதமர் மோடி அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
காவிரி சிக்கலை மையமாக வைத்து கன்னட வெறியர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கலவரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும் நிலையில், தமிழர்கள் மீது அவதூறு பரப்பி மீண்டும் கலவரத்தை தூண்ட மத்திய அமைச்சர் சதானந்த கவுடா முயற்சி செய்கிறார். அமைதிக்கு எதிரான அவரது நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை.

நியாயப்படுத்திய சதானந்தா
பெங்களூருவில் திங்கட்கிழமை காலை முதல் கன்னட வெறியர்கள் அரங்கேற்றிய வன்முறை மாலையில் உச்சக்கட்டத்தை அடைந்தது. தமிழர்களுக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட பேருந்துகளும், நூற்றுக்கும் மேற்பட்ட சரக்குந்துகளும் தீயிட்டு எரிக்கப்பட்டன. மேலும் பல நிறுவனங்களும் சூறையாடப்பட்டன. இந்த வன்முறை மற்றும் கலவரத்தை ஒட்டுமொத்த உலகமும் கண்டித்துள்ள நிலையில், கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் சதானந்த கவுடா மட்டும் இவற்றை நியாயப்படுத்தியிருக்கிறார்.

இமயமலையை சோற்றில் மறைப்பதா?
பெங்களூருவில் ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்த அவர்,‘‘கர்நாடகத்தைச் சேர்ந்த எவரும் வன்முறையில் ஈடுபடவில்லை. மாறாக தமிழ்நாட்டில் தான் கன்னடர் மீது திட்டமிட்டு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த கன்னடர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்''என கூறியுள்ளார். முழுப்பூசணிக் காயை சோற்றில் மறைப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஒட்டுமொத்த இமயமலையையே சோற்றில் மறைப்பதற்கு சதானந்த கவுடா முயன்றிருக்கிறார்.

ஆத்திரமூட்டிய கர்நாடகா
காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திலிருந்து எந்த ஒரு சூழலிலும் ஆத்திரமூட்டும் செயல்கள் கட்டவிழ்த்து விடப்படவில்லை. மாறாக கர்நாடகத்தில் தான் பெயர் தெரியாத அமைப்புகளின் நிர்வாகிகள் தொடங்கி, அமைச்சர்கள் வரை ஆத்திர மூட்டும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசி வந்தனர்.

தமிழர் மீது தாக்குதல்
தமிழகத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கடந்த 5-ஆம் தேதி உச்சநீதி மன்றம் ஆணையிட்டதுமே தமிழருக்கு எதிரான வன் முறைகளை கன்னட வெறியர்கள் கட்டவிழ்த்து விட்டனர். 9ஆம் தேதி நடைபெற்ற முழு அடைப்பின் போது தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனாலும், தமிழகத்தில் தமிழர்கள் அமைதிகாத்தனர். கன்னடர் நடத்தும் வணிக நிறுவனங்களுக்கும், அவர்கள் வாழும் பகுதிகளுக்கும் தமிழக காவல்துறை பாதுகாப்பு அளித்தது.

தீர்ப்பு வந்த உடனேயே...
காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற தீர்ப்பை மாற்றக் கோரி கர்நாடகம் தாக்கல் செய்த மனுவை 12ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக அரசைக் கண்டித்ததுடன், தமிழகத்திற்கு கூடுதல் நீரை திறந்து விட ஆணையிட்டது. அதற்கு அடுத்த நிமிடமே கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் காட்டுத் தீ போல பரவின. இதற்கு தமிழர்களின் ஆத்திரமூட்டல் காரணமல்ல. மாறாக, தமிழர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட வேண்டும்; அதன்மூலம் அரசியல் லாபம் தேட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த கன்னட அமைப்புகள் உச்சநீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்திக் கொண்டன. இதற்கு ஆயிரக்கணக்கான ஆதாரங்களை என்னால் காட்ட முடியும்.
தீயை அணைக்கலையே ஏன்?
பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பேருந்துகளை எரிக்க வன்முறையாளர்கள் கும்பலாக சென்றதை காவலர்கள் தடுக்காதது ஏன்? பேருந்துகள் தீயிட்டு எரிக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே தீயவிப்பு நிலையம் இருக்கும் போதிலும், தீயை அவிக்க தீயவிப்பு வாகனங்கள் அனுப்பப்படாதது ஏன்?

600 ரவுடிகளை விடுதலை செய்தது ஏன்?
நெடுஞ்சாலைகளில் தமிழக வாகனங்களின் ஓட்டுனர்களை சிலர் ஆடைகளை கவிழ்ந்து அவமானப்படுத்திய போது அதை காவல்துறை தடுக்காதது ஏன்? காவிரி சிக்கல் தீவிர மடையும் நேரத்தில் 600 போக்கிலிகளை விடுதலை செய்தது ஏன்? என கேள்விகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

அரசியல் லாபத்துக்காக மட்டுமே..
மொத்தத்தில் கர்நாடகத்தில் நடைபெற்ற வன்முறைகள் அனைத்தும் அரசியல் லாபம் தேடுவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டவை தான். உண்மை அவ்வாறு இருக்கும் போது தமிழர்கள் தான் வன்முறைக்கு காரணம் என்று மத்திய அமைச்சர் கூறுவது கன்னடர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி மீண்டும் வன்முறை வெறியாட்டத்தை நடத்துவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியே ஆகும்.

வாட்டாள் நாகராஜின் மறு உருவம்
சதானந்த கவுடா மத்திய சட்ட அமைச்சராக இருந்தவர்; அதற்கு முன் கர்நாடக முதல்-அமைச்சராக பதவி வகித்தவர். அப்படிப்பட்டவருக்கு எந்த ஒரு பிரச்சினையையும் பொறுப்புடன் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அதை விடுத்து வாட்டாள் நாகராஜின் மறு உருவம் போல பேசுவது பேரதிர்ச்சி அளிக்கிறது. அதிலும், கர்நாடகத்தில் பதற்றத்தை தணிக்கும் நோக்குடன் அங்குள்ள மக்கள் அமைதிகாக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்-அமைச்சர் சித்தராமய்யா உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் சதானந்த கவுடா இப்படி பேசியிருப்பதை மன்னிக்க முடியாது.

டிஸ்மிஸ் செய்யனும்
இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்து தெரிவித்த சதானந்த கவுடாவை பிரதமர் மோடி கண்டிப்பதுடன் அமைச்சரவையிலிருந்தும் நீக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications