நிவாரணப் பொருட்களை வழங்குவதில் மலிவான, மட்டமான அரசியல்... ராமதாஸ் சாடல்
கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவதில் மலிவான அரசியல் நடப்பதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் கூறியதாவது:

கடலூரில் மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று தங்களால் முடிந்த சிசிக்சை உதவிகளை அளிக்க வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க அரசு பாதுகாப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும். மழை நீர் வடியும் தருவாயில் காலரா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு, கொசுத் தொல்லையால் டெங்கு, மலேரியா, உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்.
மருத்துவ முகாம்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டால் பெரியர்வர்களும் சேர்ந்து போட்டுக்கொள்ள வேண்டும். நிவாரணப் பொருட்களை கொண்டுவரும் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் ஆளுங்கட்சியினரால் மிரட்டப்படுகின்றனர். அவர்கள் கொண்டு வரும் பொருட்கள் வழியிலேயே கொள்ளையடிக்கப்படுகிறது. இது மலிவான, மட்டரகமான அரசியல் ஆகும். இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த நடவடிக்கையைச் சரிசெய்து கொள்ளவேண்டும்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் நிவாரணப் பொருட்களை பெற்று முதல்வரின் படத்துடன் அரசு வழங்குவதைப்போல அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கதாகும்.
மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நீர்நிலை ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளையும், மக்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications