'குடிகாரர்கள்': ஆவது பெண்ணாலே, அழிவது ஆணாலே.. பாட்டுப் பாடி மக்களைக் கவர்ந்த ராமதாஸ்!
சேலம்: குடியின் கொடுமையை, குடிகாரர்களால் ஏற்படும் சமூக பாதிப்பையும் பாட்டுப் பாடி மக்களைக் கவரும் வகையில் விளக்கினார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
சேலத்தில் பாமக பெண்கள் எழுச்சி மாநாடு நடந்து. அதில் கலந்து கொண்டார் டாக்டர் ராமதாஸ்., அப்படியே, பாமகவின் சேலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அருளுக்கும் ஆதரவு திரட்டிப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் குடிகாரர்களால் சமூ்கத்திற்கு ஏற்படும் பாதிப்பையும், பெண்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் பாட்டுப் பாடி அழகாக விளக்கினார் டாக்டர் ராமதாஸ்.
குடிகார மாநிலமாக்கிய ஜெயலலிதா
இலவசங்கள் கொடுத்து தமிழகத்தையே கெடுத்து வைத்துள்ளது இரண்டு கட்சிகளும். அந்தம்மா தமிழ்நாட்டையே குடிகார மாநிலமாக்கி வருகிறார்.
குடி குடியைக் கெடுக்கும்
பின்னர் ஒரு சிறுமியை அழைத்து மது பாட்டில் ஒன்றைக் கொடுத்து அதில் உள்ளதைப் படிக்கச் சொன்னார் ராமதாஸ். அந்தச் சிறுமியும், பாட்டிலில் லேபிளில் எழுதப்பட்டிருந்த மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. குடி குடியை கெடுக்கும் என்று படித்தார். பின்னர் தொடர்ந்து பேசிய ராமதாஸ், இப்படி எழுதி வைத்தே வீதி வீதிக்கு டாஸ்மாக் திறந்து வைத்துள்ளார்.
குடிக்காதீங்க.. படிங்க
அந்தம்மா ஒவ்வொருவரையும் குடிங்க என்கிறார்...நாம் படிங்க..என்கிறோம். கல்வியை இலவசமாக தரவேண்டும்.
போதை இல்லாத தமிழகம் வேண்டும்
டாஸ்மாக் போதை மது இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும். காதல் என்கிற பெயரில் நம்ம வீட்டு குழந்தைகளை படிக்கிற வயதில் மனதை கெடுத்துவிட்டு போகிறார்கள்.
நாடகக் காதலை ஒழிக்க வேண்டும்
நாடக காதலை ஒழிக்க வேண்டும். தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை ஒழிக்க வேண்டும். பெண் திருமண வயதை 21 ஆக .உயர்த்த வேண்டும். அதுதான் பக்குவமான வயது. இல்லை அதற்கு முன்பே திருமணம் செய்யவேண்டும் என்றால் இரண்டு வீட்டு பெற்றோர்களும் சம்மததத்தின் பேரில் திருமணம் செய்யலாம். இத்தனையும் பெண்களால் தான் முடியும் .
ஆவது பெண்ணாலே.. அழிவது ஆணாலே...
ஆவதும் பெண்ணாலே ....ஆவதும் பெண்ணாலே ...(பெண்களை பார்த்து அடுத்து என்னவென்று கேட்க அவர்கள் அழிவதும் பெண்ணாலே என்று கூற).. இல்லை... ஆவதும் பெண்ணாலே ஆவதெல்லாம் பெண்ணாலே.....அழிவது ஆணாலே.....
பெண்கள் எழுச்சி பெற
எனவே பெண்கள் எழுச்சி பெற மேற்கண்டவை நடக்க நீங்கள் நம்ம அருளுக்கு வாக்களியுங்கள். அவர் டெல்லி போனால் எல்லாம் முடித்து தருவார் என்றார் ராமதாஸ்.