என்னுடைய அரசியல் ஆசான் அன்பில் மகேஷ்! அவர் பேச்சை எப்போதும் மீறியதில்லை! மனம் திறந்த திமுக எம்.பி.!
தர்மபுரி: என்னுடைய அரசியல் ஆசான் அமைச்சர் அன்பில் மகேஷ் என்றும் அவர் பேச்சை நான் எப்போதும் மீறியதில்லை எனவும் மனம் திறந்துள்ளார் தர்மபுரி திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லையென்றால் தன்னால் எம்.பி.ஆகியிருக்க முடியாது என்றும் தாம் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன் என்றால் அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தான் காரணம் எனவும் தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார் செந்தில்குமார் எம்.பி.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் செந்தில்குமார், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை தேர்தலில் வீழ்த்தியதன் மூலம் தமிழகன் அரசியல் களத்தில் கவனம் ஈர்த்தார். அதுமட்டுமல்ல தனது தொகுதியில் மக்கள் நலன் சார்ந்த பல விவகாரங்களில் அதிகாரிகளுடன் சமரசமின்றி சண்டையும் செய்திருக்கிறார். குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தனது தொகுதிக்குள் நடைபெற்ற சாலை அமைப்பது உள்ளிட்ட ஒப்பந்தப் பணிகளை திடீர் ஆய்வு நடத்தி ஒப்பந்ததாரர், செயற் பொறியாளர் என எல்லோருக்கும் கேள்விக்கணைகளை வீசி திக்குமுக்காட வைப்பார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனது வேகத்தை குறைத்துக்கொண்ட டாக்டர் செந்தில்குமார், கடந்த தேர்தலில் தனக்கு எப்படி சீட் கிடைத்தது என்பது பற்றி இப்போது மனம் திறந்துள்ளார். தர்மபுரி தொகுதியில் தனக்காக பரிந்துரை செய்ததே அமைச்சர் அன்பில் மகேஷ் தான் என்றும் அப்போது இளைஞரணியில் தர்மபுரி மாவட்ட துணை அமைப்பாளராக தாம் இருந்ததாகவும் பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். உதயநிதி ஸ்டாலினிடம் தன்னை அறிமுகம் செய்து வைத்தவர் அமைச்சர் அன்பில் மகேஷ் தான் எனவும் கூறினார்.
தனக்கு சீட் வழங்கப்பட்ட போது தவறான ஆளுக்கு சீட் கொடுத்திருக்கீங்க, தர்மபுரியில் தோற்றுவிடுவோம் என பலரும் உதயநிதி ஸ்டாலினிடம் கூறியதாகவும் ஆனால் தர்ம்புரியில் தாம் வெற்றிபெற்று உதயநிதியின் தேர்வு என்றும் சோடை போகாது என்பதை நிரூபித்ததாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications