படித்தவர்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர், நம்பிக்கையுடன் உள்ளோம்- தமிழிசை
திருப்பூர்: லோக்சபாதேர்தலில் தமிழகத்தில் படித்தவர்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். எனவே பாஜக தமிழகத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது என்று பாஜக தேசியச் செயலாளர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அவினாசி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பாரதீய ஜனதா கட்சி ஊழலுக்கு விலை போகாது. நிலையான நிலைப்பாட்டில் இருப்பவர் மோடி. தெளிவான கொள்கைகளை கொண்டவர்.
பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். படித்தவர்கள் அதிக பேர் வாக்களித்துள்ளனர்.
இந்திய மக்கள் மீது மிகவும் அக்கறை உள்ளவர் மோடி. தமிழகத்தை பொறுத்தவரை இலங்கை தமிழர் பிரச்சனை, மீனவர் பிரச்சனை ஆகியவற்றுக்கு சுமூக தீர்வு காண்பார். இந்தியாவில் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தி தொழில் துறையில் முன்னேற்றம் காண நினைப்பவர் மோடி.
தமிழகத்தில் நான் 38 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளேன். தமிழகத்தில் பாரதீய ஜனதா கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நீலகிரி தொகுதியில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் மீது மக்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பு உள்ளது. அதே சமயம் மிக பெரிய எதிர்பார்ப்பை மக்கள் மோடி மேல் வைத்துள்ளனர். பாரதீய ஜனதா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications