இளங்கோவனை மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள்.. சோனியாவுக்கு தமிழிசை கடிதம்
சென்னை: பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா சந்தி்ப்பு குறித்து தவறாகப் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதமர், முதல்வர் சந்திப்பு குறித்து காரசாரமான கருத்தைத் தெரிவித்து சிக்கலில் மாட்டியுள்ளார் இளங்கோவன். அவருக்கு எதிராக அதிமுகவினர் பெரும் போராட்டங்களில் குதித்துள்ளனர். வன்முறைக் களமாக மாறியுள்ளது அவர்களது போராட்டங்கள். பாஜகவினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பிரதமர் மோடி-ஜெயலலிதா சந்திப்பு குறித்து அவதூறாகப் பேசிய இளங்கோவன் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், இளங்கோவனை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்படி சொல்ல வேண்டும். தனிநபர் மட்டுமின்றி நாட்டையே அவமதிக்கும் வகையில் இளங்கோவன் பேசியிருப்பதாக தமிழிசை அக்கடிதத்தில் கூறியுள்ளார்.